இந்தி எதிர்த்திட வாரீர்--

இந்தி எதிர்த்திட வாரீர் -- நம்
இன்பத் தமிழ்தனைக் காத்திட வாரீர்

முந்திய காலத்து மன்னர் நம்
முத்தமிழ் நாட்டினில் தொத்திடு நோய்போல்
வந்தவட மொழிதன்னை -- விட்டு
வைத்ததனால்வந்த தீமையைக் கண்டோம்.

செந்தமிழ் தன்னில் இல்லாத -- பல
சீமைக் கருத்துக்கள் இந்தியில் உண்டோ?
எந்த நலம்செய்யும் இந்தி -- எமக்கு
இன்பம் பயப்பது செந்தமிழன்றோ.

தென்னாடு தான்எங்கள் நாடு -- நல்ல
செந்தமிழ் தான்எங்கள் தாய்மொழி யாகும்
புன்மைகொள் ஆரிய நாட்டை -- எங்கள்
பொன்னாட்டினோடு பொருத்துதல் ஒப்போம்.

இன்னலை ஏற்றிட மாட்டோம் -- கொல்லும்
இந்தியப் பொதுமொழி இந்தி என்றாலோ
கன்னங் கிழிந்திட நேரும் -- வந்த
கட்டாய இந்தியை வெட்டிப் புதைப்போம்.

- பாவேந்தர் பாரதிதாசன்

- மூலம்: பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள்

- நன்றி: பாவேந்தர் பாரதிதாசன்

-

எழுதியவர் : (28-Apr-17, 5:47 pm)
பார்வை : 52

சிறந்த கட்டுரைகள்

மேலே