என் குட்டி தேவதையே
என் குட்டி தேவதையே,
என் கருவில் உன்னை சுமக்கையில்
எனக்கு தெரியவில்லை
ஆணா பெண்ணா என்று...
ஆனால் உறுதியாய் கூறினேன்
அன்பெனும் அமுதாய் நீ
அவதரிப்பாய் என்று...
பனியில் நனைந்த ரோஜாவே-என்
கனவை நனவாக்க வந்த ராஜாத்தியே...
உன் ரோஜா கன்னங்களை
என் முத்தமழையால் நனைக்க வாய்பளித்தவளே...
இரவு பகலெல்லாம் தொழுதேன்
இரவிலும் ஒளியாக நீ வாழவே...
உன் புன்னகையால்
என் வாழ்க்கையில் விளக்கேற்றினாயே...
பகலிலும் உன்னை பற்றியே கனவு கண்டேனே...
பால்நிலா போலவே நீ வருவாயெனவே...
நீ உறங்கையில் என் தேகம் உனக்கு தலையணை ஆகியதுவே...
நான் உறங்கையில் உன் புன்னகை என் கனவிலும் வந்ததுவே...
உன் தேகத்தை அழகழகான உடைகளில் அலங்கரித்தேனே...
அதையும் நான் அபத்தமில்லால்
அன்பாய் தான் உடுத்திவிட்டேனே...
உன் தாய் மொழியும்
என் தாய் மொழியும்
இனிய தமிழ் தானே...
கனிய கனிய உனக்கு நானும்
கற்பித்து கொடுத்தேனே...
எங்கே நீ சென்றாலும்,
இன்முகமாய் உன்னை படைத்த இறைவனை நினைவுகொள்,
தன்னை மறந்து உன் வரவை எதிர்பார்த்த
தந்தையையும் நினைவுகொள்,
தன் வாழ்வே நீ தான் என்று வாழும்
உன் தாயையும் நினைவுகொள்,
தரம் என்றும் குறையாத தமிழ் மொழியையும் நினைவுகொள்,
இவ்வளவும் உன்னோடு துணையாயிருக்கையில்,
எவ்வளவு சரிவு வந்தாலும்
துவண்டுபோகமாட்டாய்...
எடுத்த காரியங்கள் அனைத்தையும்
முடித்து காட்டுவாய் வெற்றியுடன்...