தாய்மை

பெண்மையைப் பெருமைப் படுத்துவது தாய்மை !
```````````````````````````````````````````````````````````````````````````````
பெண்ணாகப் பிறந்ததற்கே பெருமையுற வேண்டுமம்மா
பெண்ணிற்குப் பலவடிவம் பிறவிதனில் இருந்தாலும்
பெண்ணினமே நிறைவுகொளும் பெருமைமிகு வரமெதென்றால்
பெண்மைக்கே உரித்தான பெரும்பேறாம் தாய்மைதானே !

கருவுற்ற நாள்முதலாய்க் கனவுகளில் மிதந்திருந்து
கருணையுடன் முப்போதும் கண்ணிமைபோல் காத்திருந்து
உருண்டாலும் உதைத்தாலும் உயிருருக அதைரசித்து
விருப்புகளைப் புறந்தள்ளி வியக்கவைக்கும் தாய்மையொன்றே !

பத்துமாதம் சுமந்தவளும் பத்தியமும் தானிருந்து
சொத்தாக வேகருதி சோர்வினிலும் சுகம்பெறுவாள்
நித்திரையை மறந்தவளும் நெஞ்சினிக்க மலர்ந்திடுவாள்
உத்தமியாள் தியாகத்தின் உறைவிடமாய்த் திகழ்ந்திடுவாள் !

புதிதாகப் புவியினிலே பூத்திட்ட மகவிற்கு
உதிரத்தைப் பாலாக்கி உளமகிழ்ந்து புகட்டிடுவாள்
துதிபாடி தெய்வத்தைத் துணைக்கழைப்பாள் நோயுற்றால்
அதிசயமாம் தாய்மையதன் அடையாளம் பொறுமையேதான் !

அன்பென்ற ஆயுதத்தால் அனைவரையும் கரைத்திடுவாள்
தன்னைத்தான் அரைத்தவளும் சந்தனமாய் மணந்திடுவாள்
அன்னையெனும் உறவேதான் அவரவர்க்குக் கடவுளாகும்
தன்னலமே சிறிதுமிலாத் தனித்துவமே தாய்மையாகும் !

பிழையேதும் செய்தாலும் பிள்ளைகளுக்(கு) எடுத்துரைத்து
மழைபோல குளிர்விக்கும் மந்திரமும் கற்றிடுவாள் !
உழைத்தோடாய்த் தேய்ந்தாலும் உருக்குலைந்தே போனாலும்
இழையோடும் பாசத்தில் இம்மியேனும் குறைவையாள் !

பிள்ளைகளுக்(கு) ஒன்றென்றால் பெற்றமனம் துடிதுடிக்கும்
முள்தைத்துக் கிழித்தாற்போல் மொத்தமாக கசிந்துருகும்
தள்ளாத வயதினிலும் தாயுளமே தவித்திருக்கும்
எள்ளளவும் ஈடுசொல்ல இயன்றிடுமோ தாய்மைக்கு ?

தாய்மைக்கு நிகரென்றும் தரணியிலே ஒன்றுமில்லை
தாயைப்போல் நல்லுறவு தாங்கிடவும் வேறில்லை
தாய்மடிபோல் ஆறுதலைத் தரவல்ல(து) ஏதுமில்லை
தாய்மையொன்றே பெண்மைக்குத் தனிப்பெருமை சேர்த்திடுமே !!

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (1-May-17, 12:53 am)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 155

மேலே