கண்ட நாள் முதலாய்-பகுதி-05

...........கண்ட நாள் முதலாய்............

பகுதி : 05

துளசியின் முகத்தில் தெரிந்த ஆர்வத்தை ஓரக்கண்ணால் நோக்கியவள் வேண்டுமென்றே சிறிது நேரத்திற்கு ராகமிளுத்து விட்டு,அதன் பின்னே சொல்லத் தொடங்கினாள்..

"அவனுக்கென்ன சும்மா ஆறடியில அவ்வளவு அம்சமா இருந்தான்.என்ன ஒரு கம்பீரம்,என்ன ஒரு அழகு என்று பவி பாட்டுக்கு அவனை வார்த்தைகளால் ரசித்துக் கொண்டிருந்தாள்...

ஒரு அளவுக்கு அவள் சொல்வதை பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தவள்...பவி அவனை உருகி உருகி வர்ணிக்கவும் பொங்கியெழுந்துவிட்டாள்...

"போதும் போதும் நிறுத்துடி....நீ எதுக்குடி அவனை சைட் அடிச்ச??,அவன் அழகாய் இருந்தானானு மட்டுந்தானே உன்னைக் கேட்டேன்,அதுக்கு ஆமானு சொல்லு இல்ல இல்லைனு சொல்லு,அத விட்டிட்டு இப்படி ரசிச்சிட்டு இருந்தா என்னடி அர்த்தம்..?மூச்சுவிடாமலே கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தாள் துளசி...அவளது மனதில் அவ்வளவு கோபம்...அது எதனால் வந்த கோபமென்று அவளுக்குத் தெரியவில்லை...ஆனால் எப்படி இவ அவனை ரசிக்கலாம் என்ற கேள்வி மட்டுமே அவளுள் சுழன்று கொண்டிருந்தது...

"அடிப்பாவி,என்னமோ உன்னோட புருஷனை சைட் அடிச்ச மாதிரி இந்த குதி குதிக்கிறாய்,உனக்கு போய் பாவம் பார்த்து சொன்னேன் பாரு,என்னைச் சொல்லனும்..அவனைப் பார்க்காம இருக்கும் போதே இந்த பாடுன்னா,நீ மட்டும் அவனைப் பார்த்திருந்தா என்னை ஒரு வழி பண்ணியிருப்ப போலயே"

எதனால் அவளுக்கு இவ்வளவு கோபம் வந்தது?தன் உயிர்த்தோழியிடமே அதைக் காட்டுமளவிற்கா அவன் அவளைப் பாதித்துவிட்டான்..??எத்தனை முறை இதே கேள்விகளையே அவள் மனம் மாறி மாறிக் கேட்டாலும் அதற்கான பதில் தான் அவளிடத்திலில்லை....ஆனால் அவளுக்கு ஒன்று மட்டும் நிச்சயமாகத் தெரிந்தது...அவனது அந்த சிறிது நேரத் தொடுகையில் எதுவோ ஒன்று இருந்தது...அதுவே அவளை நாணம் கொள்ளவும் செய்தது...அந்த தொடுகை தான் அவளுள் இனம்புரியா இம்சைகளையும் விதைத்துச் சென்றது...

பவி சொல்வது போல் நான் ஏன் அவனைப் பார்க்காமல் விட்டேன்?ஒரு வேளை துளசி மட்டும் நிமிர்ந்து அவன் கண்களை நேருக்கு நேராய் சந்தித்திருந்தால் அதில் தெரிந்த அளவற்ற காதலைக் கண்டிருப்பாள்...நீ எனக்கே உரியவள் என அவன் கண்கள் சொல்லிய மொழிகளை அறிந்திருப்பாள்...ஆனால் இது எதுவுமே நடக்காது போனது விதியின் விளையாட்டு என்றே சொல்ல வேண்டும்....

"யாருக்கு கொடுத்து வச்சிருக்கோ??ம்ம்...என்று பவி விட்ட பெரியதொரு பெருமூச்சிலே மீண்டும் சுயநினைவுக்கு வந்தவள்..."யாரையடி சொல்லுறாய்??..."

வேறு யாரு?எல்லாம் அந்த ஆறடி ரோமியோ தான்,யாருக்கு தெரியும்,அந்த அதிஷ்டசாலி நானாக் கூட இருக்கலாம்...என சொல்லிக் கொண்டே துளசியைப் பார்த்து கண்ணடித்தாள்....பவி என்னமோ துளசியை வம்பிழுக்க வேண்டுமென்றே அப்படி சொல்லி வைத்தாள்.இதே வேறு ஒருவனைச் சொல்லியிருந்தால் துளசியும் அதை கேலி பண்ணியே சிரித்திருப்பாள்....ஆனால் அவள் இன்று இருக்கும் நிலை தான் வேறாச்சே...

பவி சொல்லி முடித்தது தான் தாமதம் விட்டால் துளசி பார்வையாலேயே அவளை பொசிக்கியிருப்பாள்...அவ்வளவு அனல் பறந்தது கண்களில்...

"மெல்ல...மெல்ல...கண்ணு சுளுக்கிக்க போகுது,ஏன்டி ஒரு விளையாட்டுக்கு சொன்னா,இப்டி அனல் பார்வை பாக்குற..?"

"எதுடி விளையாட்டு,அது எப்படி நீ அப்படி
சொல்லலாம்.."

"அம்மா தாயே நான் இனி ஒன்னும் சொல்ல
உன்னோட கண்ணகி பார்வையை எல்லாம் மூட்டை கட்டி வைச்சிட்டு வா...வீட்டை போற வழியை பார்க்கலாம்..."

ஒரு வழியாய் துளசியின் கோபத்தை மலையிறக்கியவள்....பார்க்கிங்கில் சென்று காரை எடுத்துக் கொண்டு வந்து அவள் முன் நிறுத்தினாள்...

காரில் ஏறும் முன் கடற்கரையை ஒரு தடவை திரும்பிப் பார்த்தவள்,மீண்டும் அவனைப் பார்ப்பேனா?என்ற ஏக்கத்தோடு காரினுள் ஏறிக்கொண்டாள்...கார் வேகமாக வீட்டை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது...ஆனால் அவளது மனம் மட்டும் கடற்கரையிலேயே உலாவிக் கொண்டிருந்தது...


தொடரும்....

எழுதியவர் : அன்புடன் சகி (22-May-17, 6:10 pm)
பார்வை : 635

மேலே