இவர்களே போதும்

தள்ளாடும் வயதில்
கூழ்விற்று வாழும்
மூதாட்டிகள்...

தவறவிட்ட பணப்பையை
உரியவர்க்கே
கொண்டுசேர்க்கும்
மனிதர்கள்...

நடைபாதையில்
கடைவைத்து
குடும்பம் காக்கும்
கைம்பெண்கள்...

பசிமறந்து கோவணத்துடன்
நிலமுழும் உழவர்கள்....

தினக்கூலி வேலை
செய்து
பிள்ளைகளை
படிக்கவைக்கும்
தந்தைகள்....

வாழ்வின் இறுதி
தருணத்திலும்
ஒருவருக்கொருவர்
விட்டுக்கொடுக்காத
முதிர்ந்த தம்பதிகள்...

என்றோ ரொட்டித்துண்டு
போட்டதற்காய்
எப்பொழுதும்
வாலாட்டும் நாய்கள்...

காலடிகொண்டு
மிதித்தாலும்
மீண்டும்
வரிசை கோர்க்கும்
எறும்புகள்..

தொல்லையென
முதியோரில்லம்
சேர்த்தாலும்
எள்ளளவும்
சாபமிடா பெற்றோர்கள்

குஞ்சுகளுக்கு
ஆபத்தேனும்
நேர்ந்துவிட்டால்
இறைவனாக
இருந்தாலும்
எதிர்த்துப் போராடும்
தாய்ப்பறவைகள்...

போதும்
போதும்
இவர்களே போதும்
புத்தகங்கள்
தேவையில்லை
வாழ்வில்
நம்பிக்கையும்
நேர்மையுமாய்
உண்மையும்
உறுதியுமாய் வாழ
இவர்களே போதும்...

எழுதியவர் : கார்த்திகைசெல்வன் (23-May-17, 9:35 pm)
Tanglish : ivarkale pothum
பார்வை : 104

மேலே