சிருவாடு

சிறுக சிறுக சில்லரையும் ரூபாயுமா
எங்காத்தா பிடிச்சு வச்ச
சிருவாட்டப் போலத் தான்

வீதி வீதியா அலைஞ்சு திரியுறேன்- அவ
இருந்து வாழ்ந்த சுவடெல்லாம் சேகரிச்சு
நூறு முறை எண்ணிப்பார்க்க..

பள்ளிக்கூடம் போய்- வீடு
வந்து சேரும்​ முன்ன, ஆத்தா
நீ வச்ச கருவாட்டுக் குழம்பு மணம்

கம்மாங் கரைத் தாண்டி
என்னக்​ கைப்பிடிச்சு
இழுக்குமத்தா...

சேலைத் தலைப்பில்- ஆத்தா
நீ முடிஞ்சு வைச்ச சில்லறையைப்
போலத் தான்,

ஜம்முனு உட்கார்ந்திருக்க
என் உசுருக்கு
உச்சியில ...

அங்கிட்டும் இங்கிட்டுமா நான்
ஆட்டி விளையாண்ட
உன் தண்டட்டி

இப்ப கதை பேசுது
என் கையில
கிடந்து..

இத்தனையும்
பொசுக்கு பொசுக்குனு
வந்து போகுது கண்ணு முன்ன....

ஆனா இரத்தமும் சதையுமா
உன்ன கட்டிப்பிடிச்சு உரவாட
ஆத்தா உசுரோட நீ இல்லையே​...

உன்ன உரிமைக்
கொண்டாட எனக்கும்
இப்ப நாதி இல்லையே....

ஆத்தா!!
எனக்கு உன்னவிட்டா
வேறு நாதி இல்லையே!!
நாதி இல்லையே!!

எழுதியவர் : ஜனனி (25-May-17, 10:53 pm)
பார்வை : 865

மேலே