புத்தரும் பிராமணர்களும்
புத்தர் பற்றி வெள்ளைக்காரர்கள் எழுதியதை அப்படியே நம்பிவிடக்கூடாது. அவர் ஏதோ இந்து மதத்துக்கு எதிராகப் புரட்சிக்கொடி தூக்கியதாகவும் பிராமணர்களை எதிர்த்ததாகவும் வெளிநாட்டுக்காரர்கள்
எழுதியதை நம்பி இங்குள்ள திராவிட பக்தர்களும் புத்தர் படத்தை தனது வீட்டில் மாட்டி வைத்திரு ப்பர். அவர்களுக்கு புத்தர் ‘தம்ம பத’த்தில் என்ன சொன்னார் என்று தெரியாது பாவம்! அதாவது அறியாத ஜீவன்கள்; சுக்கான் உடைந்த கப்பல்கள்; வழி தெரியாமல் திணறும் அந்தகர்கள்.
என்னுடைய பல திராவிட நண்பர்கள் இன்னும் திருக்குறளையே படித்ததில்லை. படித்த பிறகு அதன் கருத்துகளை வேறு ஜீரணம் செய்யவேண்டும்; பின்னர் அதில் ஒரு திருக்குறளையவது பின்பற்ற வேண்டும்! நடக்குமா?
புத்தமதத்தினரின் வேதப் புத்தகமான தம்ம பதத்தில் 423 ஸ்லோகங்கள் உண்டு. அதில் கடைசி அத்தியாயம் ‘பிராமணர்’ என்ற தலைப்பிட்ட 26-ஆவது அத்தியாயமாகும். அதில் 41 ஸ்லோகங்கள் இருக்கின்றன. அதாவது அந்தப் புத்தகத்தில் பத்தில் ஒரு பகுதி. அவ்வளவு முக்கியத்துவம் பிராமணர்களுக்கு!
அசோகனும் தனது கல்வெட்டுகளில் முதலில் பிராமணர்களைக் குறிப்பிட்டுவிட்டே மற்ற வகுப்பினரைக் குறிப்பிடுவான்; அவ்வளவு பய பக்தி.
எப்படி தமிழ் வேதமான திருக்குறள் இருக்கும் வரை இந்துமதம் அழியாதோ, அப்படி தம்மபதம் உள்ளவரை இந்துமதம் அழியாது. ஏனெனில் இரண்டு நூல்களிலும் இந்துமதக் கருத்துகள் அப்படியே உள்ளன. ஆயினும் வள்ளுவனும் புத்தனும் வெறும் சடங்குகளையும், யாகத்தில் உயிர்ப் பலியையும் எதிர்த்தது உண்மையே. அவர்கள் இருவரும் உலக மக்கள் எல்லோரும் ‘வெஜிட்டேரியன்ஸ்’ – சாக பட்சிணிகள்– ஆக வேண்டும் என்று எதிர்பார்த்தனர். அது என்றுமே நடவாத காரியம். இது இந்துக்களுக்குத் தெரியும். ஆனால் மனிதன் உயர்நிலையை அடைய ஒவ்வொருவரும் மாமிசத்தை தவிர்த்தே ஆக வேண்டும். மாமிசமுண்ணாததால் மட்டும் உயர்நிலையை அடைந்து விடமுடியாது.
தம்மபதத்தில் பிராமணர் பற்றிய அதிகாரத்தில் யார் பிராமணன் என்று விவரிக்கிறார். அதற்கு முன்னரும் 6, 7 இடங்களில் பிராமணர் பற்றிச் சொல்கிறார்.
“ஒரு பிராமணனும் முனிவனும் கடந்த கால பாவங்களில் இருந்து விடுபட்டவர்களாவர்; அவன் தனது தந்தை தாயைக் கொன்று இருந்தாலும், இரண்டு நியாயமான அரசர்க ளைக்கொன்று இருந்தாலும். ஒரு நாட்டையே சீரழித்திருந்தாலும், மனிதர்களின் மாணிக்கம் போன்றோரைக் கொன்று இருந்தாலும் அவர்கள் தூயவர்களே (தம்மபதம் 294, 295)
ஏன் இப்படிச் சொன்னார்? ஒரு முனிவனும், ஒரு பிராமணனும் சொல், செயல், சிந்தனையில் (திரிகரண சுத்தி) ஒன்றுபட்டுவிட்டால் பின்னர் அவர்கள் பூலோக தேவர்கள் ஆவர்.
வள்ளுவனும் புத்தனும் சொன்ன எல்லா கருத்துகளும் ஏற்கனவே உள்ள கருத்துகள்தான். ஆனால் அவைகளைச் சுருக்கமாக, ஆழமாக, அழுத்தமாக, மக்கள் பேசும் மொழிகளில் (பாலி, தமிழ்) சொன்னதும் அவைகளை அவர்கள் தன் வாழ்நாளில் பின்பற்றிக் காட்டியதுமே அவர்களுடைய நூல்களை வேதங்கள் அளவுக்கு உயர்த்தின.
தம்மபத நூலுக்குப் பலர் உரை எழுதியுள்ளனர். அதில் இந்தியாவின் ஜனாதிபதியாக இருந்த தத்துவ அறிஞர் டாக்டர் ராதாகிருஷ்ணன் எழுதிய உரையில் வரும் இரண்டு சம்பவங்களைக் காண்போம்:-
முதல் சம்பவம்
ஒரு பிராமணர் யாக யக்ஞாதிகளை முடித்துவிட்டு அவற்றின் பிரசாதத்தைக் கொண்டு வந்தார். புத்தரிடம் வந்தவுடன் அவைகள் என்னவென்று கேட்டார். அவை யாகத்தின் மிச்சம், மீதி என்று அறிந்தவுடன் புத்தர் சொன்னார்:-
“ஓய், பிராமணரே! யாகத் தீயில் குச்சிகளை (சமித்து) வைப்பதன் மூலம் நீவீர் தூய்மையாகிவிட்டதாக எண்ண வேண்டாம். இதெல்லாம் மேம்போக்கானவை. நான் என்னுள்ளே உறைந்துகிடகும் அகத் தீயை எழுப்புகிறேன். அந்த ஞானத் தீ எப்போதும் எரிந்து கொண்டிருக்கும். இந்த வேள்வியில் என்னுடைய நாக்குதான் யாகக் கரண்டி; என்னுடைய இருதயம்தான் (உள்ளம்தான்) யாக குண்டம்” என்றார் புத்தர்.
பிராமணர்கள் செய்த யாக யக்ஞங்கள் காலப்போக்கில் பொருளற்றுப் போய் வெறும் சடங்குகள் ஆனதால் புத்தர் இப்படிப் புகன்றார். ஆனால் புத்தருக்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் எழுந்த பிருஹத் ஆரண்யக, முண்டக உபநிஷத்துகளிலேயே இக்கருத்து உள்ளது. புத்தரோ வள்ளுவரோ புதிதாக ஒன்றும் சொல்லவில்லை
இரண்டாவது சம்பவம்
ஒருமுறை புத்தர், அம்பலதிகா என்னும் இடத்திலுள்ள பொது மண்டபத்துக்குள் வந்தார். அப்பொழுது அவர்கள், புத்தர் மீது குற்றச் சாட்டுகளை சுமத்திவிட்டு வெளியேறிய, ஒரு பிராமணன் பற்றி பேசிக்கொண்டிருந்தனர். புத்தர் சொன்னார்,
” என்னைப் பற்றியோ, நான் போதிக்கும் விஷயங்கள் பற்றியோ, புத்த பிட்சுக்கள் பற்றியோ யாராவது குறைகூறினால் ஏன் கோபப்படுகிறீர்கள்? இப்படிக் கோபப்பட்டால் உங்களால் ஆன்மீக முன்னேற்றம் காண முடியாது. மேலும் ஏனையோர் சொல்வது சரியா தவறா என்று பகுத்துணரும் சக்தியையும் இழந்து விடுவீர்கள்” என்று எச்சரித்தார்.
புத்தரின் வெற்றிக்கு இதுதான் காரணம். அவர் கோபப்பட்டதாக ஒரு சம்பவமும் இல்லை. மற்றவர்களைக் குறைகூறியதாகவும் ஒரு சம்பவமும் இல்லை. காலப்போக்கில் அவரது பிரதம சீடர்களாக ஆனவர்களும் பிராமணர்களே!
தான் சொல்லும் கருத்துகளை, அவர் பின்பற்றினால், பின்னர் அவருடைய உபதேசங்களுக்கு மந்திர சக்தி வந்துவிடும்.
ராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகாநந்தர், ரமண மகரிஷி, காஞ்சிப் பெரியவர் ஆகிய பெரியோர் வாழ்விலிருந்து இவற்றை அறியலாம்.
தமிழ் & வேதம்