அம்மா

இந்திரனை பெத்தாயோ
இல்லை
சந்திரனை பெத்தாயோ
சுந்தரிய பெத்தாயோ
இல்லை
கந்திரிய பெத்தாயோ
அத்தனையும் தங்கமம்மா
உனக்கு
ஆரணங்கு சொந்தமம்மா
கண்ணுறக்கம் கண்டாலும்
இல்லை
கால்வலிக்கு நொந்தாலும்
உன்னுறக்கம் தான் தொலைச்சி
என்னை
உயர்வாக மதிச்சவளே
சொல்லெடுத்து நான் படிக்க
சோறு தண்ணி நீ மறந்த -
நான்
பட்டம் வாங்கி பாக்கனும்னு
பகலிரவை நீ தொலைச்ச
தினம்
கூலி வாங்கி கூலு வெக்க
நெல்லுமணி போதலையே
தாலி வெச்ச தங்கத்தையும்
தானமாக தந்தவளே
பட்டம் வாங்கி வந்துவிட்டேன்
பாச மகன் வென்று விட்டேன்
கந்தல் துணி நீயான
கலெக்டரென நானானேன்
ஊருலகம் வாழுதுன்னா
உன்னைப்போல் தாயாளே
தியாகம் என்ற சொல்லிருந்தா
போதாது போதாது
அர்ப்பணிப்பு என்று சொன்னா
ஆகாது ஆகாது
பெத்தவள பெத்தெடுத்து
பிறவிப் பயன் தீர்த்தால்தான்
பெண்ணருமை கண்டுணரும் ...
ஆண்கள் சனம் அடி உணரும்...


கவிஞர் செல்ல இளங்கோ

எழுதியவர் : கவிஞர் செல்ல இளங்கோ (30-May-17, 11:53 pm)
Tanglish : amma
பார்வை : 596

மேலே