புத்தன் ஞானம் போதி மரத்தடியில் இல்லை

பனை மரத்துக் கீழ்க் குடிப்பதெல்லாம்
கள்ளில்லை
போதி மரத்தடியில் அமர்பவனெல்லாம்
புத்தனில்லை!

ஞானம் மரத்திலிருந்து
வீழ்ந்து உதிரும் சருகில்லை
மனத்திலிருந்து
வான்விரியும் சிறகு!
தேவையெல்லாம் தேடல் மட்டுமே!
நமக்கோ
தேடலெல்லாம் தேவை பற்றியே!
இது மாறாத வரை
ஆயிரம் போதி மரங்கள் கீழ்
அமர்ந்தாலும் போதாது!

தன்மயப்படுத்திய பார்வை விடுத்து
பொதுமயப் பார்வையில் சிந்தனை முகிழ்த்து!
போதி மரமில்லை
புலால் கடை நிழலிலும்
கிடைக்கும் ஞானம்!

ஆம்
புத்தன் ஞானம் அடைந்தது
போதி மரத்தடியில் இல்லை
அவன் ஞானமடைந்த இடத்தில்தான்
போதி மரம் இருந்தது!

- இ.பு.ஞானப்பிரகாசன்

எழுதியவர் : இ.பு.ஞானப்பிரகாசன் (1-Jun-17, 5:43 pm)
சேர்த்தது : இபுஞானப்பிரகாசன்
பார்வை : 644

மேலே