கண்ட நாள் முதலாய்-பகுதி-09

........கண்ட நாள் முதலாய்.....

பகுதி : 09

அப்பாவின் கேள்விக்கு அவள் என்னவென்று சொல்வாள்??அவர் திருமணம் பற்றிச் சொன்னதும் தான் அவளுக்கே தன் மனதில் இருப்பது தெளிவாகப் புரிந்தது.அவனது முகத்தை அவள் பார்க்காமல் இருந்திருக்கலாம்...ஆனால் அவனது தொடுகையில் அவனை முழுமையாக உணர்ந்திருந்தாள்.அந்த உணர்வு தந்த மயக்கத்தில் குழம்பித் தவித்துக் கொண்டிருந்தவளுக்கு அது காதல் என்பதே சிறிது நேரத்திற்கு முன் தான் தெளிவான நிலையில் அதை எப்படி என்னவென்று அவள் அப்பாவிடம் சொல்வாள்...

அதனால் மனதை மறைத்து அப்பாவிடம் இரண்டு நாட்கள் அவகாசம் கேட்டாள்..."நான் கொஞ்சம் யோசித்துச் சொல்கிறேன் அப்பா..வார இறுதி நாட்களில் ஆங்கிலத்தில் மாஸ்டர் டிகிரி செய்வதற்கும் அனுமதி கிடைத்துள்ளது..அதற்கான வகுப்புகளும் இன்னும் பத்து நாட்களில் ஆரம்பமாகிறது...இதை முடித்ததும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று தோன்றுகிறது.நான் இரண்டு நாட்களில் உங்களுக்குச் சொல்கிறேன் பா...நீங்கள் கேட்டது போல் என் மனதில் வேறு யாரும் இல்லை என்று பாதி உண்மை பாதி பொய் கலந்து சொல்லி முடித்தாள்...

அவள் தன் மனதில் வேறு யாரும் இல்லை என சொன்னதும் தான் யோகேஷ்வரனுக்கு கொஞ்சம் மனம் அமைதி அடைந்தது...அவள் மேற்படிப்பை விடுத்து வேறு ஏதும் சொல்லியிருந்தால் சந்தேகம் கொண்டிருப்பார்,ஆனால் துளசி படிப்பென்று வந்துவிட்டாள் வேறு எதைப்பற்றியும் சிந்திக்க மாட்டாள் என்பதால் அவள் கேட்டது போலவே இரண்டு நாட்கள் அவகாசம் கொடுத்து நல்ல முடிவாகச் சொல்லச் சொன்னார்.திருமணத்தின் பின் கூட படிப்பைத் தொடரலாம் மா...அதற்கு எந்தத் தடையும் வராது என்பதையும் சொல்லியே அவளை அனுப்பி வைத்தார்.

துளசி உள்ளே செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தவர்....கலைவாணியைத் தேடிச் சென்றார்..அவர் குழப்பமாக வருவதைக் கண்ட கலைவாணிக்கும் பதட்டம் தொற்றிக் கொண்டது..."என்னாச்சுங்க,துளசி சம்மதம்னு சொல்லிட்டாள் தானே..??

"இல்லை மா...அவள் இரண்டு நாள் டைம் கேட்டிருக்குறாள்...மேலே படிக்கப்போறாளாம் அதனால கொஞ்சம் யோசித்துச் சொல்கிறேன் என்கிறாள்...பார்ப்போம் நல்ல முடிவாக சொல்லுவாள் என்று நம்புவோம்.."

"இது அவளோட வாழ்க்கை...முடிவு பண்ண வேண்டியதும் அவள் தானே..இரண்டு நாளைக்கப்புறம் என்ன சொல்லுறாள்னு பார்ப்போம்...முடியாதுனு ஏதும் சொன்னாள்னா அதுக்கப்புறம் நான் அவகிட்ட பொறுமையா பேசிக்கிறேன்.."

"ம்ம்...நீ சொல்றதும் சரி தான்....வாழப்போறது அவ தானே....இத நான் வாக்கு கொடுக்கும் முதலே யோசிச்சிருக்கனும்..."

"இத பத்தி இனி யோசிச்சு ஒன்னும் ஆகப்போறதில்லை...கண்டிப்பா நீங்க தலைகுனிஞ்சு நிற்குற அளவுக்கு உங்க பொண்ணு ஒன்னும் விட்டிர மாட்டா...இதையே போட்டு குழப்பிக்கிட்டு இருக்காமா அடுத்து நடக்க வேண்டியதை பாருங்க..."

"சரி மா....நான் பார்மசிக்கு கிளம்புறன்...நீ மதியம் சமைச்சதும் கோல் பண்ணு.."

"சரிங்க..."

இதுவரையில் எதற்கும் கலங்கிநிற்காதவர் இன்று முதன்முறையாக கலங்கி நிற்பதைக் காணும் போது கலைவாணிக்கு மிகவும் கவலையாக இருந்தது...துளசி நல்ல முடிவாகச் சொல்ல வேண்டுமென்று கடவுளிடம் வேண்டிக் கொண்டவர் மதியச் சமையலுக்கான வேலைகளில் இறங்கினார்..

இங்கே அறையிலிருந்த துளசிக்கோ என்ன செய்வதென்றே தெரியவில்லை...இரண்டு நாட்கள் டைம் கேட்டுவிட்டாள்...ஆனால் அதற்குள் அவளால் இதற்கு முடிவு காண முடியுமா??அப்பாவிடம் சென்று யாரென்றே தெரியாத ஒருத்தனை காதலிக்கிறேன்னு சொன்னா அவர் அதை ஏற்றுக் கொள்வாரா??என் மேல் இருந்த நம்பிக்கையில் தானே அப்பா வாக்கு கொடுத்தார்,இப்போது நான் முடியாதென்று சொன்னால் கூட அவளை யாரும் இங்கு கட்டாயப்படுத்தப் போவதில்லை...ஆனால் அதற்காக அவள் அப்பா அவர் நண்பர் முன்னே தலைகுனிந்து நிற்க வேண்டுமே?அதை எப்படி அவளால் பார்த்துக் கொண்டு இருக்க முடியும்??மாறி மாறிக் கேள்விகள் சுழன்றடித்ததில் அவள் மண்டையே வெடித்துவிடும் போல் இருந்தது.

பவியுடன் கதைத்தால் தான் இதற்கு ஏதும் முடிவு காண முடியுமென யோசித்தவள்..அவளுக்கு கோல் செய்து இப்போது நீ ப்ரியா எனக் கேட்டாள்..?

"ஆமாடி இப்போ ப்ரிதான்,ஈவினிங் தான் கொஞ்சம் வேலையிருக்கு..."

"நான் இப்போ உன்கிட்ட பேசியே ஆகனும்,உடனே வெளிக்கிட்டு வா...வெளிய எங்கேயாவது போலாம்"

"என்னடி,ஏதாவது பிரச்சனையா??.."

"நீ வா....நான் சொல்லுறன்..."

"சரி டி..இன்னும் ஐந்தே நிமிடத்தில் உன் முன்னாடி நிற்பேன்....நீ மட்டும் ரெடியாகி நிக்கல அவ்வளவுதான் சொல்லிட்டேன்..."

அதெல்லாம் நான் இன்னைக்கு ரெடியாகிடுவேன்,நீ சொன்ன மாதிரி வந்து நில்லு..என்று சொல்லிவிட்டு போனை கட் செய்தவள் இரண்டு நிமிடத்திலேயே தயாராகி விட்டாள்...அவள் காலைச் சாப்பாடு சாப்பிடாமலேயே கிளம்புவதைக் கண்ட கலைவாணி சாப்பிட்டுச் செல்லும்படி கூறினார்...தான் சாப்பிடாமலே சென்றாள் அம்மா அதற்கும் கவலைப்பட்டுக் கொள்வார்கள் என்பதால் சாட்டுக்கு கொஞ்சத்தை வாயில் போட்டுவிட்டு பவிக்காக காத்திருக்கத் தொடங்கினாள்....ஆனால் மனமோ மீண்டும் தன் வேலையைக் காட்டத் தொடங்கியது...

இங்கே அரவிந்தனின் நிலையோ வேறாக இருந்தது....அவன் போட்டோவில் இருந்த துளசியின் புகைப்படத்தையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்...

அரவிந் ஆறடியில் கம்பீரமான தோற்றமுடையவன்...நிறம் அவனிடத்தில் கொஞ்சம் குறைவாக இருந்தாலும் அவனுக்கு அதுவே அழகும் கூட...அவனது சிரிப்பிற்காகவே பல பெண்கள் அவனைத் துரத்திக் கொண்டிருக்க அவனோ துளசியின் குழந்தைத் தனமான சிரிப்பில் விழுந்துவிட்டான்...

துளசியின் அப்பா யோகேஷ்வரன் தான் அவளது போட்டோவை சங்கரனிடம் கொடுத்திருந்தார்...அதை தான் தன் கையிலே வைத்து பார்த்துக் கொண்டிருந்தான் அரவிந்தன்.இது வரையில் திருமணமே வேண்டாம் என்று இருந்தவனுக்கு துளசியைப் பார்த்ததுமே பிடித்துவிட்டது...அந்த போட்டோவில் துளசி சேலை கட்டியிருந்தாள்...அவளால் தான் அந்த சேலை கூட அழகாக இருப்பதாக தோன்றியது அவனுக்கு....அவளைப் பார்த்தவாறே கல்யாணக் கனவினில் மூழ்க ஆரம்பித்தான் அரவிந்தன்...


தொடரும்....

எழுதியவர் : அன்புடன் சகி (5-Jun-17, 6:15 am)
பார்வை : 721

மேலே