பத்துமாதம் சுமந்தவளே

அம்மாவுன் பாசத்திற்(கு) அளவுகோல் உலகிலில்லை
விம்மியழும் நெஞ்சத்திற்(கு) ஆறுதல் வேறாருமில்லை !

பட்டம்நான் பெற்றுவிட்டால் பட்டதுயர் போகுமென்று
பட்டணத்தில் படிக்கவைக்கப் பாரத்தைச் சுமந்தாயே !
கட்டியவன் போனாலும் கண்ணீரைத் துடைத்துவிட்டுத்
தட்டாமல் கேட்டவற்றைத் தயவுடனே அளித்தாயே ! (அம்மாவுன் )

பத்துமாதம் சுமந்தவளே ! பாசத்தால் நனைத்தவளே !
உத்தமியே எனக்காக உருக்குலைந்து போனாயே !
சொத்துபத்து அத்தனையும் துடைத்தெடுத்து விற்றுவிட்டாய்
எத்தனையோ அல்லலுற்றாய் எனக்காகப் பொறுத்தாயே ! ( அம்மாவுன் )

வேலையேதும் கிடைக்கவில்லை விதியைநொந்து பலனுமில்லை
சோலைமலர் மணக்கவில்லை சோகமதை மாற்றவில்லை
தாலாட்டி வளர்த்தவளைத் தவிக்கவிட எண்ணமில்லை
பாலைவனம் போலுள்ளம் பசுமையின்றித் துடிக்கிறதே ! ( அம்மாவுன் )

ஓயாமல் தேடுகிறேன் உழைப்பதையே வேண்டுகிறேன்
நாயாகத் திரிகின்றேன் நல்லபணி கிட்டவில்லை
தாயாரைக் காப்பாற்ற தனயனுக்குக் கடமையுண்டே
ஆயாசம் தானடைந்தேன் ஐயோநான் என்செய்வேன் ??? (அம்மாவுன் )

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (9-Jun-17, 12:51 pm)
பார்வை : 203

மேலே