அன்பே உன்னால்

அன்பே உன்னால்.......

என் நாசி தொட்ட
காற்று ஏனோ
சுமந்து வந்த உன்
வாசத்தை
வலிய புகுத்திவிட்டு
என் வாட்டம் காண
சிரிக்கிறதே! . . .

என் நிம்மதியின்
கையிருப்பை
நித்தமும் பருகி அள்ளி
நின் வாயிலில்
தெளித்து வைத்து
நிலா
காய்ந்துபோகிறதே! . . .

காரிருள் பூத்த
வானமது
விதைத்திட்ட
வெள்ளிக் கம்பிகளாய்
தடம் புரளாது
தரைமுட்டி
தெறித்துவிட்ட
மழைத்துளியை
படம் பிடித்த
மின்னலது
உன் பார்வையை
நினைவுறுத்தி
பசிமறக்கச் செய்கிறதே! . . .

பச்சிளங் கிளையமர்ந்த
கருங்குயிலின் கானமது
லயிக்காதஇசை
ஓசையாகி
உன்
சலங்கை ஒலி பின்னே
செவியிரண்டும் நீள்கிறதே! . . .

உன் நினைவில்
உயிரை ஊறவைத்து
கசியாதா உன் மனதில்
ஈரமென
உள்ளம் வியர்வையில்
நனைகிறதே! . . .

சிலந்தி வலைதன்னில்
சிக்கிய சிற்றுயிராய்
உனைசுற்றி
பின்னிவைத்த
காதல் வலை தன்னில்
வாழவா! . . .
வீழவா! . .
என தொங்கவிட்ட
கேள்விதன்னில்
தலைகீழாய்
நான்! . . . . .
சு.உமாதேவி

எழுதியவர் : சு.உமாதேவி (10-Jun-17, 4:10 pm)
Tanglish : annpae unnaal
பார்வை : 615

மேலே