காட்சிக்கேற்ற கவிதை

வளிவருடி உளம்நனைக்க வான்மழையோ உடல்நனைக்க
களிப்பினிலே உயிர்நனைய கலந்தினிக்கும் காதலுடன்
கிளிமொழியாள் அருகிருக்க கிளுகிளுப்பில் மனம்துவள
நெளிந்தசையும் மரஞ்செடியை நெக்குருகி ரசித்தனரோ ?

அலைகடலின் ஓரத்திலே அழகியதோர் வெளியினிலே
கலைகொஞ்சும் சிற்பங்கள் கவின்கோயில் கண்டிடவே
சிலைபோலும் கன்னியுடன் சிலிர்ப்புடனே கரங்கோர்த்து
மலைப்போடு குடைக்குள்ளே மனம்நெகிழ நடந்தனரோ ?

மல்லையிலே எழில்கொஞ்சி மண்பெருமை தனைச்சொல்லும்
பல்லவனின் கலைத்திறனைப் பாருக்குப் பறைசாற்றும்
கல்லழகைக் காணவந்த காதலரின் நல்வாழ்வும்
வெல்லட்டும் இனிதாக மேதினியில் வாழ்த்துவமே !!

எழுதியவர் : (19-Jun-17, 6:48 pm)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 69

மேலே