பாடங்கள்

விடியல்கள் எல்லாம் விசித்திர மாக
. விரிவதைப் பாருங்கள் ! - அவை
முடிவுகள் இல்லா இருளிலை என்றே
. முழங்கிடும் கீதங்கள் !

அருவிகள் எல்லாம் மலைகளில் வீழும்
. அழகினைப் பாருங்கள் ! - அவை
வரும்வழி தன்னில் வீழினும் ஆற்றல்
. வளர்த்திடும் பாடங்கள் !

கரைதொட எண்ணிக் காலமெல் லாம்தன்
. கடின உழைப்பாலே - அலை
தரைதொட வந்து திரும்புதல் சொல்லும்
. தளர்ந்திடக் கூடாதே !

மறைந்திருந் தாலும் மகிழ்வுடன் பாடும்
. மரக்குயில் சொல்வதெலாம் - புகழ்
திறமையை நாடித் தானாய்ச் சேரும்
. திரட்டுவ தாகாதே !

இயற்கையி லெல்லாம் இயற்றிடும் கீதை
. இனிதெனத் தேர்வோமே ! - அட
முயற்சியி னாலே எதுவும் நடக்கும்
. முழுநிலை சேர்வோமே !

-விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (20-Jun-17, 9:35 am)
சேர்த்தது : விவேக்பாரதி
பார்வை : 57

மேலே