காதல் எங்கே போகும்
======================
காதலில் விழுந்தேன்.
கண்களால் தூக்கி எடுத்து
இதயத்தில் அமரவைத்தாள்.
பருவச் சிராய்ப்புகள்.
இதழ்களால் களிம்பு பூசி
அன்பினால் கட்டிப் போட்டாள்
எழுந்து நடமாடத் தொடங்கினேன்.
வேண்டுமென்றே அவளது
கனவுகளின் வீதியில்
உறவுகள் ஊற்றிவைத்த
கல்யாண எண்ணெய்யில்
கா(த)ல் வழுக்கி இப்போது
அவள் விழுந்துவிட்டாள்.
காதல் காயங்கள் மாறுவதற்கு
கழுத்தில் மூன்று முடிச்சிபோட்டு
குடும்பமென்ற மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்ட அவளை
ஜென்மத்துக்கும் ஏறெடுத்து
பார்க்க முடியாத பாவியாய் நான்.
என்றாலும் அவள் பிழைத்துக் கொள்வாள்.
எப்படியோ நானும் வாழ்ந்து போவேன்
இனி எங்களுக்குள் மலர்ந்த அந்த
காதல் எங்கு போகுமோ?
*மெய்யன் நடராஜ்