செழுமைமிகு தமிழுக்கேன் சமற்கிருத எழுத்துக்களே
முழுமையாகக் கற்றறிந்தோர் முற்றிலுமே தொடுவதில்லை
தெளிவாக எழுதுவோரும் தள்ளியேதான் வைத்திருப்பர்
முனைவர்களும் புலவர்களும் ஒதுக்கிவைத்தும் எப்படித்தான்
இணைந்துவிட்டாய் தமிழில்வந்து சமற்கிருத எழுத்துகளே..?
ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் ஆட்சிசெய்யும் எங்கள்தமிழ்
பாயிரங்கள் பலபடைத்து வீற்றிருக்கும் தங்கத்தமிழ்
கோடியாண்டு கடந்தபின்னும் இளமையாக இருந்திடுமே
வார்த்தைகளைக் கடன்வாங்க பலமொழிகள் வந்திடுமே
எப்படியோ ஒட்டிக்கொண்டாய் தெரியாமல் ஓடிவிடு
அப்படித்தான் இருப்பேனென்றால் என்னாவாய் தெரியாது
இளையோர்கள் ஆதரவு உனக்கென்று நினைக்காதே
பிழையென்று அவருன்னைத் துரத்தும்நாள் தூரமில்லை
உனைத்தாங்கி நடப்பதற்கு நீயென்ன ஊன்றுகோலா
தமிழுக்குநீ தேவையில்லை தமிழைநீ தனித்துவிடு
பனைமரமாய் தமிழிருக்க உன்துணை யார்வேண்டியது
அன்னாந்து பார்த்துவிடு உன்வழியே சென்றுவிடு
தனித்தமிழ்தான் மிகஅழகு வந்திட்டாயோ நீபழக
அணிதிரண்ட தமிழ்சான்றோர் எரித்திடுவார் தமிழைவிடு
கனிகளெனச் சுவைதருமே மணிமணியாய் ஒளிர்ந்திடுமே
பனியைவிடக் குளிர்தருமே இதம்தரும் எம்தமிழ்வாழி..!!!