வேண்டுவன

பூக்கள் பூக்கின்ற பொழுதுகளை - அதில்
. பூமி விரிகின்ற அழகுகளைப்
பாக்கள் வடிக்கின்ற வரம்வேண்டும் - அதில்
. பாவம் தொலைகின்ற கதிவேண்டும் !
தீக்குள் கிடக்கின்ற வாழ்வகலப் - பல
. திக்கில் நம்தேகம் சென்றுலவக்
காக்கை குருவிகளின் நிலைவேண்டும் - மனம்,
. காயம் கழற்றுகிற வரம்வேண்டும் !

நம்மை நாம்நீங்கும் விசைவேண்டும் - புவி
. நாடி நாமென்னும் நசைவேண்டும் !
செம்மை எதுவென்னும் தெளிவுடனே - ஒரு
. செய்கை செய்கின்ற குணம்வேண்டும் !
தம்மைத் தாம்வாழ விடவேண்டும் ! - இத்
. தரணி வாழ்தற்கும் வழிவேண்டும் !
சும்மா இருக்கும்சுகம் வரவேண்டும் ! - அதன்
. சுருதி யாதென்ற றியவேண்டும் !

கால மாற்றங்கள் தாங்கிடவும் - நம்
. கடமை ஏற்றங்கள் செய்திடவும்
நீல வான்கண்டு வியந்திடவும் - அதன்
. நீளம் போல்நெஞ்சம் விரிந்திடவும்
சாலச் சிறந்தவினை செய்திடவும் - பெருஞ்
. சாதி சமயவெறி தீர்ந்திடவும்
கோலச் சொல்கொண்டு கவிதைமழை - தனைக்
. கொட்டு கின்றபெருந் திறம்வேண்டும் !

-விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (29-Jun-17, 11:09 pm)
சேர்த்தது : விவேக்பாரதி
பார்வை : 54

மேலே