யார் நீ
அற்புதமான பிறவி
உன்னதமான வாய்ப்பு
தவமின்றி கிடைத்த வரம்
மனிதபிறப்பு...
உனக்கு ஆண்டவன்
கொடுத்த அபூர்வமான
ஆறாம் அறிவு
இந்த படைப்புக்கு மட்டுமே...
கரடுமுரடான நிலங்களில்
விதைகள் விதைப்பதில்லை
பண்படுத்தப்பட்ட
நிலங்களிலே
விதைக்கப்படுகின்றன
நீ உன் மனமெனும்
விதையை பண்படுத்து
கரடுமுரடான சூழலிலும்
அது முளைத்து துளைத்து
நல்லெண்ணங்களாக
வீரிட்டு வெளியில் வரட்டும்...
ஆண்டவன் உனக்கு
அறிவெனும்
அட்சயபாத்திரத்தை
கொடுத்துள்ளான்
அதை நீ ஒருமுறை கூட
காலி செய்யவேயில்லை...
இறைவன் உனக்கு பாசம்
எனும் இன்பசாகரத்தை
கொடுத்துள்ளான் அதில்
நீ நீந்துவதே இல்லை
கடவுள் உனக்கு
இருளில் நித்திரையும்
ஒளியில் விழித்தலும்
கொடுத்துள்ளான்
நீயோ நித்திரை
கொள்ளாமல் மனதை
அலைபாயவிடுகிறாய்...
இறைவன் உனக்கு
வேறு ஜீவராசிகளிடம்
இல்லாத சிரிப்பெனும்
ஒரு அற்புதபொக்கிஷம்
கொடுத்துள்ளான்
நீயோ புன்னகை
செய்வதே இல்லை...
இறைவன்
உனக்கு ஆன்மிகம் எனும்
ஏழாம் அறிவையும்
கொடுத்துள்ளான்
நீயோ அதன் அருகில் கூட
போவதே இல்லை...
இறைவன் உனக்கு
உன்னதமான பார்க்கும்
சக்தியை கொடுத்துள்ளான்
நீயோ நல்லவைகளை
தவிர்த்து தீயகாட்சிகளையே
பார்க்க விரும்புகிறாய்..
உன் கேட்கும்
சக்தியை
வீனடித்து
நல்வாழ்வுக்கு
தேவையில்லா
செய்திகளையே
கேட்டு மகிழ்கிறாய்...
ஒரு நகர்ந்து போகமுடியாத
மரம் கூட உலகுக்கு
எவ்வளவோ நன்மைகள்
செய்கின்றன நீ என்ன
செய்தாய் வந்து
பிறந்த இவ்வுலகிற்கு...