காதல் பழக வா-26

காதல் பழக வா-26

கண்களை பார்த்தால்
காதல் பற்றிக்கொள்ளும் என்று
சொன்னதை நம்பி
அலட்சியமாக இருந்துவிட்டேன்...

உன் குரலொலி கூட
எனக்குள் நுழைந்து
காதல் யுத்தம் செய்துவிடுமென்ற
முன்னெச்சரிக்கை இல்லாமலே...

ஏதுவாகினாலும் உன் கரம்பற்ற
காத்திருப்பேன்...
ஏய்த்துவிடாமல் என் கண்முன்
வந்து காதல் சொல்லிவிடடி ....

ஆயுள் முழுதும்
என் கண்ணுக்குள் உன்னைவைத்து
இமை திறந்துக்கொண்டே காதல் உலகில்
உன்னை வாழவைப்பேன்....

மறக்காமல் மறுக்காமல்
என் காதல்குயிலாய் என்னை
வந்து சேரடி......
ராதியை பற்றி நினைத்து நினைத்து குழம்பிக்கொண்டிருந்தது கண்ணனின் மனம்....
ராதியோ கண்ணனை நினைத்து நினைத்து காதலில் ஊறிப்போயிருந்தாள்..இருவருக்கும் இடையில் கடந்தகாலம் மிகப்பெரிய தடுப்புசுவராய் நிற்க அவர்களின் காதல் கலங்கிப்போய் நின்றது...

"அத்தான், நான் கிட்ட வந்தாலே நீங்க தூரமா ஓடிபோய்டரிங்க, என் மேல ஏதாவது கோவமா, எனக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கு தெரியுமா"

"அப்படிலாம் இல்ல ராதி, வேலைவிஷயமா தானே வெளிய போறேன், நீ ஏன் வருத்தப்படற, உன் பிரண்ட்ஸ்கூட போய் பேசிட்டு இருக்க வேண்டியதுதானே, வேலை முடிஞ்சதுனா நானே வர போறேன், இதுக்கெல்லாம் இப்படி பீல் பண்றயே'

"பிரண்ட்ஸா, யாரை சொல்றிங்க, என்னோட பிரண்ட்ஸ் இங்க எங்க இருக்காங்க"

"என்ன ராதி இப்படி கேட்கற மித்து, கவி உன் பிரண்ட் தானே, என்மேல இருக்க காதல்ல அவங்களை மறந்துட்டியா நீ?"

விளையாட்டாக கண்ணன் கேட்டது நிஜமாகிப்போகும் என்று கண்ணன் புரிந்துகொள்ளாமல் கிண்டலாக சிரித்தான்...

"என்ன அத்தான் சொல்றிங்க, அவங்க எல்லாம் உங்களோட பிரண்ட்ஸ் தானே, அப்படி தான் நான் நினைச்சிட்டு இருந்தேன், உங்களுக்கு எப்பவுமே விளையாட்டு தான், நான் சோகமா இருக்கேனு சிரிக்கவைக்க விளையாடறிங்க, அப்படி தானே, இது தான் உங்ககிட்ட எனக்கு பிடிச்ச விஷயம்....அதெல்லாம் போகட்டும் நீங்க சாப்பிட வாங்க, உங்களை சாப்பிட தான் கூப்பிட வந்தேன், ஏதேதோ பேசிட்டு வந்த விஷயத்தை மறந்துட்டேன், உங்ககிட்ட பேசினதுல என்மனசுல இருந்த வருத்தமெல்லாம் போயே போச்சு, இப்போ நாம போகலாமா "

ராதி படபடவென பேசித்தள்ளிவிட்டு போனவுடன் கண்ணனுக்கு அதிர்ச்சியில் உடலெல்லாம் நடுங்க ஆரம்பித்துவிட்டது....

"அப்போ ராதி பழசையெல்லாம் மறந்துட்டாளா, அதெப்படி நடக்கும், ஆனா அவ பேசியதை பார்த்தா அப்படி தான் தெரியுது , ஆனா எப்படி என்ன மட்டும் அவளுக்கு ஞாபகம் இருக்க முடியும்"

கண்ணன் வெகுவாக குழம்பி போனான் .....

"கண்ணா எவ்வளவு நேரமா உனக்காக சாப்பிடாம வெயிட் பண்ணிட்டு இருக்கோம் , நேரத்துக்கு சாப்பிடாம அப்படி என்ன தான் வேலை பார்க்கறியோ, ஒரு நேரம் தான் எல்லாரும் ஒண்ணா உட்கார்ந்து சாப்பிட முடியுது, இந்த நேரமும் வேலைனு சொல்லிட்டு பிசியா இருந்தா எப்படி...சரி… சரி முதல்ல உட்காரு, ராதி பாரு உனக்காக நிறைய ஸ்பெஷலா செஞ்சி வச்சிருக்கா" என்று பெரியப்பா சொன்னதும் கண்ணனின் மனம் புயலானது....

ராதியோ கண்ணனுக்கு பார்த்து பார்த்து பரிமாறியதில் அத்தனை பெரும் சந்தோசம் கலந்த அதிர்ச்சியில் இருக்கா, ராதியையே அதிர்ச்சியாக அங்கு வந்து சேர்ந்தாள் மது...
"அக்கா" என்று கொஞ்சலாக அழைத்துக்கொண்டே பாசத்தோடு ராதியின் கழுத்தை கட்டிக்கொண்டவளை முன் இழுத்து பார்த்தவள் கண்களில் ஆனந்த கண்ணீர் வழிய சந்தோசம் முகமெங்கும் மின்னத்தொடங்கியது...

"மது,நீயா? எப்படி இருக்க....நீ எப்படி இங்க?"

"அக்கா, ஏன் வந்தன்னு கேட்கறீங்களா?"

"ஏய் லூசு, உங்கிட்ட அப்டி கேட்பேனா, நீ தான் என் செல்ல தங்கச்சியாச்சே, உன்ன பார்த்ததுல எனக்கு கையும் ஓடல, காலும் ஓடல"

"அக்கா, கால் தான் ஓடும், கையெல்லாம் ஓடினா அதுக்கு பெரு வேற"

"போடி, வந்ததும் ஆரம்பிச்சிட்டியா உன் குறும்பு தனத்தை, உன்னை பார்த்ததுல எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா....அத்தான் இவ தான் மது, இவ என் கூட பிறக்காத தங்கச்சி, எனக்கு இவள்னா அவ்ளோ பிடிக்கும்"

"அக்கா, போதும் போதும், என்ன இங்க வரவச்சது யாருனு சொன்னேன் நீ இவ்ளோ விளக்கம் குடுக்க மாட்ட"

மதுவின் பேச்சில் புரியாமல் விழித்தவளை சிரித்துக்கொண்டே பார்த்திருந்த மது கண்ணனை நோக்கி கைகாட்டி "மாமா தான் என்னை இங்க வரவச்சது" என்று சொல்ல ராதியின் விழிகள் பெரிதாகி அவளின் வியப்பை காட்டியது.....

அத்தான் நீங்களா, உங்களுக்கு எப்படி மதுவை தெரியும்? என்று கேட்டிருந்தால்கூட கண்ணனின் குழப்பம் தீர வழிகிடைத்திருக்கும், ஆனால் ராதியோ கண்ணனுக்கு கண்களாலே தேங்க்ஸ் சொல்லிவிட்டு மதுவையும் அமர வைத்து பரிமாற்ற ஆரம்பித்துவிட்டாள்....

மதுவை அந்த வீட்டில் அத்தனை பேருக்கும் பிடித்துபோனதில் ஆச்சரியமே இல்லை, காரணம் மதுவின் வெகுளித்தனமான பேச்சும், கிண்டலும், உண்மையான அன்பும் தான்...

அதே சமயம் ராதி மதுவோடு ஒட்டிக்கொண்டு அவளின் தோழிகளை அந்நியமாக பார்த்ததில் கண்ணன் சுதாரிக்க ஆரம்பித்துவிட்டான்...

ரிஷப்ஷன் வேலைகள் ஒருபக்கம் மும்மரமாக நடந்துகொண்டிருக்க கண்ணன் ராதியை பற்றி தெரிந்துகொள்வதில் மும்மரமானான்....

"கண்ணா ராதி முகமே சரி இல்லை, கேட்டதுக்கு பதில் பேசாம போய்ட்டா, நான் கொஞ்சம் வேலையா இருக்கேன், நீ என்னனு போய் பாருப்பா"

"சரிம்மா நான் பார்த்துக்கறேன்"

"ராதி......ராதி........."

"மாமா என்ன ஆச்சி, ஏதாவது வேணுமா?"

"மது ராதி எங்க இருக்கா?"

"அக்கா ரூம்ல தான் இருப்பாங்க மாமா"

"சரி, நான் ரூம்க்கு போய் பார்க்கறேன், மது ஒரு நிமிஷம், போன அப்டியே சார்ஜர்ல போட்ருமா,போன் ஆப் ஆக போகுது"

"சரி மாமா, நான் ஜார்ஜர்ல போடறேன், நீங்க அக்காவை போய் பாருங்க"

கண்ணன் ராதியை பார்க்க போன நேரத்தில் கண்ணனின் போனுக்கு கால் வர மது போனை எடுத்துக்கொண்டு கண்ணனிடம் ஓடினாள்....

"ராதி எதுக்குமா இப்படி தேவை இல்லாம பீல் பண்ற, இப்படி யோசிச்சா உன் உடம்பு தான் கெட்டுப்போகும், நான் தான் சொல்றேனே, வேலை அதிகம்… அதான் பேச நேரம் கிடைக்கலன்னு, திரும்பி திரும்ப இப்டியே மூஞ்ச தூக்கிவச்சிகிட்டு பீல் பன்னிட்டு இருந்தனு வை, நான் இனி என் பொ ண்டான்டியே எனக்கு போதும்னு அத்தனை வேலையையும் விட்டுட்டு வீட்ல உட்கார்ந்துக்குவேன், உனக்கு சம்மதமா"

"நான் அப்டிலாம் உங்களை செய்ய சொல்லலையே"

"ஓஹோ, அப்போ இப்படி செய்யட்டுமா"ராதியை இழுத்து அணைத்து கொண்டு கண்ணன் கேட்கவும் ராதியின் சோகமெல்லாம் போய் அவள் முகத்தில் வெட்கம் குடிகொண்டது...

போனை எடுத்துக்கொண்டு வந்தவளின் காதில் கண்ணன் ராதியின் சிரிப்பு சத்தம் கேட்கவும் என்ன தான் விளையாட்டுத்தனமாக இருந்தாலும் நிலைமையை புரிந்துகொண்டு தொந்தரவு செய்யாமல் மீண்டும் போனை சார்ஜில் போட்டாள்....

ஆனால் அவள் விட்டாலும் அவன் விடுவதாக இல்லை போலும், மீண்டும் மீண்டும் போனில் அழைப்பு வர, வேறு வழி இல்லாமல் மதுவே காலை அட்டென்ட் செய்து பேச ஆரம்பித்தாள்...
"ஹலோ யார் பேசறது?"
பெண்ணின் குரல் கேட்டதும் சுதாரித்து கொண்டு எதிர்கேள்வி கேட்டான்...

"ஹலோ நீங்க யாரு, இது கண்ணன் போன் தானே"

இதை கேட்டதும் மதுவின் குறும்புத்தனம் மேலோங்க அவள் விளையாட ஆரம்பித்துவிட்டாள்...

"கண்ணன் மாமா போன் தான், ஆனா பேசறது நான் தான்"

"அதான் யாருனு கேட்டேன்"

"அதான் சொன்னேனே நான் தான்னு"

"நீ யாரா வேணா இருந்துட்டு போ, முதல்ல போனை கண்ணன்கிட்ட குடு, நான் கண்ணன் கிட்ட தான் பேசணும்"

என்கிட்ட பேசினா குறைஞ்சா போயிடுவீங்க, முதல்ல என்கிட்ட பேசுங்க அப்புறம் நான் மாமாகிட்ட கொடுக்கறேன் என்று கேட்க நினைத்தவள் மனதை கட்டுப்படுத்திக்கொண்டு "ஆமா நீங்க யாரு?"

"நான் யாரா இருந்தா உனக்கென்ன, போனை கண்ணன்கிட்ட குடுன்னா குடுக்க வேண்டியது தானே"

"முதல்ல உங்க பேரை சொல்லுங்க, அப்புறம் குடுக்கறதா வேணாமான்னு யோசிக்கிறேன்"

"உனக்கு எத்தனை தைரியம், என்கிட்டயே இப்படி பேசற, இது மட்டும் கண்ணனுக்கு தெரிஞ்சா உனக்கு நான் யாருனு புரியும்"

"அது தெரியும்போது பார்த்துக்கலாம், இப்போ உங்க பேரை சொல்றிங்களா, இல்லை போனை கட் பண்ணட்டுமா"இதை சொன்ன ரெண்டாவது நொடி பதில் வராமல் போகவே மது போனை கட் செய்தாள்....

மது போனை கட் செய்த ரெண்டாவது நொடி மீண்டும் அவனிடமிருந்தே கால் வந்தது...

இந்த முறை தான் மது கவனித்தாள், அவனின் பேர் போனில் சேவாகி இருந்தது...அவன் மீண்டும் கால் செய்ய ராம் என்று பளிச்சிட்ட செல்போன் திரையை பார்த்தவளின் மனம் என்னவோ ராமின் பேரை பல முறை மென்மையாய் சொல்லிப்பார்த்து கொண்டது.....

அதே சமயம் தன்னிடம் இத்தனை துடுக்காக பேசியவளின் குரலை கேட்கும் குறுகுறுப்பில் தான் மீண்டும் கால் செய்தோம் என்பதை அறியாமலே ராமின் மனம் அவளின் குரலை கேட்க காத்திருந்தது....

எழுதியவர் : ராணிகோவிந் (14-Jul-17, 6:20 pm)
பார்வை : 668

மேலே