பணமும் பசியும் -கங்கைமணி
நேற்று இல்லடா
இன்று இல்லடா
நாளை இருக்குமா தெரியல!
காலம் மாறுது
பொழுதும் போகுது
கையில் காசுதான் நிலைக்கல்ல !.
கையில் பார்க்கிறேன்
பையில் பார்க்கிறேன்
பசியை போக்கவும் பணமில்ல!
பிச்சை எடுப்பவர்
தட்டில் காசுதான்
பல்லைக்காட்டுது புரியல!.
வறுமை என்பது
வாழ்க்கை ஆனபின்
வயிறு பசிப்பதில் தவறில்லை,
பசியின் வேதனை
பாதை மாற்றினால்
படைத்தவன் மீதும் குறையில்லை!.
ஒட்டும் வயிற்றுடன்
உழைக்கும் வர்க்கம்தான்
ஓடி உழைப்பது ஏனடா ?!
உண்டு கொழுத்தவர்
பானைவயிற்றுக்குள்
பதுக்கிவைக்கத்தான் பாரடா!.
பாறை உடைப்பவர்
பாரம் இழுப்பவர்
கடவுளென்கிறார் காசையடா !.,
காமம் தீர்க்கவும்
கருவை கலைக்கவும்
காயை நகர்த்துதந்த கடவுளடா !.
பசியின் பார்வையோ
பார்க்கும் யாவையும்
பறித்து தின்னுதே ஏனடா ?
விளைந்த பொருளுக்கு
விலையை மாட்டியே
விற்கப் பார்ப்பது அறிவடா!.
வாயும் வயிறையும்
படைத்த இறைவனினும்,
பணத்தை படைத்தவன் மேலடா!.
அச்சு காகிதம்
அடிமையாக்குது,
ஐம்பூதம் அடங்கிய உடலைடா!.
-கங்கைமணி