எதுவும் நிரந்தரம் இல்லை

எதுவும் நிரந்தரம் இல்லை...!

மணம்வீசும் மலர்கள் மாலையில் வாடும்
வனம்சூழும் குயிலோசை குரல்வளை ஓயும்
தனம்கோடி குபேரமும் தெருகோடி சேரும்
மனம்கூடிய பாசமும் பசபசப்பாய் சோரும்

கட்டிய கோட்டைகள் தரைமட்டமாகும்
ஒட்டிய ஒட்டடைகள் ஒவ்வாமையாகும்
வாட்டிக் கூட்டி வகுத்த போகம்
வட்டியும் முதலுமாய் கைவிட்டுப் போகும்

ஆய்விழிப் பார்வை அந்தகம் ஆகும்
வாய்வழிப் புன்னகை உதட்டோடு குன்றும்
நோய்நொடி அகன்று நூறாண்டு கடந்தாலும்
மெய்வற்றி உலர்ந்து பாடையில் போகும்

நேற்றைய நிஜங்கள் இன்று புரையும்
இன்றைய நிகழ்வுகள் நாளை திரையும்
முந்தை கடந்தவை காலத்தால் கரையும்
நாளை நடப்பது யாருக்குத் தெரியும்?

பூமிக்கு நாம்வந்த யாத்திரை பிறப்பு
முறையாய் முடிந்த பயணமே இறப்பு
உதிர உணர்வுகள் உறவுக்கு விருந்து
உதிர்ந்து மறைந்தால் மறதியே மருந்து

கண்ணில் பதிந்தது காற்றாய் கலந்தது
மண்ணில் உதித்தது மண்ணால் செமித்தது
படைத்ததோ வடித்ததோ பூமிக்கு சொந்தமில்லை
ஜனனம் மரணமின்றி இயற்கையில் ஏதுமில்லை...!

கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (16-Jul-17, 8:22 pm)
பார்வை : 249

மேலே