கரையை தொடாத அலைகள்

"அக்கா... நான் சொல்லுறதை நீ நல்லா கேளு....“ என்று சின்ன மருமகள் பெரிய மருமகளிடம் கிசுகிசுத்தது வீட்டினுள் நுழைந்த சுந்தரத்தின் காதில் விழுந்ததும் சற்று தயங்கி நின்று காதைக் கூர்மையாக்கினார்.

“நம்ம மாமியார் மாரடைப்புல போயி இன்னயோட நாலு மாசம் ஆயிடுச்சி. அத்தை இருந்தப்போ மாமாவை அவங்களே கவனிச்சாங்க.. இப்போ நாம தான் கவனிக்க வேண்டியதிருக்கு.." சின்னவள் தொடங்க..

"ஆமாம் நாமும் எத்தனை நாளைக்குத் தான் இப்படியியே அவரையும் கவனிச்சிக்கினு இந்த ஒண்டு குடித்தனத்துல வாழுறது... நாமும் மத்தவங்க மாதிரி தனியா வாழ வேணாமா...?“ என்று கேட்டாள் பெரியவள்.

“அதுக்காக நம்ம புருஷனுங்க சம்பாதிக்கிற சம்பாதியத்துல இந்த டவுனுல நாலாயிரம் அஞ்சாயிரம் வாடகை கொடுத்து தனியா போக முடியுமாக்கா...?“ இது கவலையுடன் சின்னவள்..

“முடியாது தான். அதுக்குத்தான் நான் ஒரு ஐடியா சொல்லுறேன் நல்லா கேட்டுக்க.. நம்ம புருஷங்க ரெண்டு பேரும் அத்தை இறந்த பிறகு மாமா கடைக்குப் போவாத இந்த நாலு மாசத்துல கடைய நல்லா கவனிச்சித் தொழிலைக் கத்துக்கினாங்க. இனி மாமாவோட தயவு இல்லாமலேயே இவங்க சம்பாதிப்பாங்க. அதனால மாமாவ முதியோர் இல்லத்துல சேத்துடலாம்ன்னு நான் சொல்லுறேன்." திட்டத்தை கச்சிதமாக சொன்னாள் பெரியவள்.

“என்ன சொல்ல வர்ற அக்கா நீ...?“ சின்னவள் புரியாமல் கேட்டாள்.

“ஐயோ... ஒனக்கு ஒண்ணும் புரியாது. மாமாவ முதியோர் இல்லத்துல சேர்த்துட்டா... மேல் வீட்டுல வாடகை இருக்கிறவங்களைக் காலிபண்ணிட்டு நானும் அவரும் குழந்தையுடன் மேல வீட்டீல தங்கிக்கிறோம்...
நீ உன் பிள்ளைகளோட இங்கேயே கீழ் வீட்டுல இருந்துக்கோ... என்ன புரியுதா...?“

“புரியுதக்கா.. இதுக்கு நம்ம புருஷருங்க ஒத்துக்குவாங்களா...?“ கவலையுடன் கேட்டாள் சின்னவள்.

“அது நம்ம கையில தான்டி இருக்குது...” என்று அழுத்தமாகச் சொன்னாள் பெரியவள்.

"சரிக்கா.. நான் எவ்வூட்டுகாரரை எப்படியும் சம்மதம் வாங்கிடுவேன்.. நீங்களும் அத்தான்ட பேசி சம்மதம் வாங்கிடுங்க.."

அனைத்தையும் அமைதியாய் கேட்டுவிட்டு சுந்தரம் அவ்விடத்தை விட்டு மிகுந்த மன கவலையுடன் தனதறைக்குள் சென்று தாழிட்டு கொண்டார்.

இரண்டு வாரம் ஓடியது.. ஒரு ஞாயிறு காலை சொல்லி வைத்தார் போல் இருமகன்களும் சுந்தரத்தின் அறையில் எதிரில் வந்து ஒருவித தயக்கத்துடன் நின்றார்கள். அவர்கள் தயங்கிய விதத்திலேயே தெரிந்தது மகன்களின் மனது.

“அப்பா... நாங்க உங்ககிட்ட முக்கியமா கொஞ்சம் பேசணும்“ அவன் தயங்கியப் பேச்சிலிருந்தே என்னவாக இருக்கும் என்பதைப் புரிந்து கொண்டார் சுந்தரம்.

“சொல்லுப்பா...”

“அப்பா... வந்து எனக்கும் ரெண்டு பிள்ளைங்க ஆயிடுச்சி... தம்பிக்கும் கொழந்தை இருக்குது... அதனால... வந்து...“

அவன் மென்று விழுங்கி வார்த்தையை வெளியே துப்புவதற்குள் சுந்தரம் குரலைக் கணைத்துக்கொண்டு பேச்சை ஆரம்பித்தார்...

“ஆமாம்டா.. நான் கூட இதை கொஞ்ச நாளா யோசிச்சிட்டுதான் இருக்கேன். எவ்வளவு காலம் தான் இப்படியே கூட்டத்தோட ஒரு பிரைவசி இல்லாம இருக்கிறது...?

"அதில்லப்பா.. நாங்க வந்து.."
மகன் இடைமறித்ததும்..

"நான் சொல்றத முதல்ல கேளுங்கப்பா..
உங்களுக்குன்னு குடும்பம் குழந்தைன்னு ஆயிடுச்சி.. நீங்க ரெண்டு பேரும் தொழிலையும் நல்லா கத்துக்கினீங்க. அதனால பேசாம நீங்க ரெண்டு பேரும் வெளிய வீடு பாத்துக்கினு தனிகுடித்தனம் போங்க... ரண்டுபேருக்கும் சேர்த்து ஒரே வீடா பாக்காதீங்க. தனிவீடா பாருங்க. அப்பதான் பிரைவசி இருக்கும்." சுந்தரம் சொல்லி முடித்தார்.

அவர் சொன்னதும் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துவிட்டு தன் மனைவியரின் அதிபுத்தியை நினைத்து கொண்டார்கள். இப்படி அவர் சொல்லுவார் என்று யாரும் எதிர் பார்க்கவில்லை.

உரையாடலை வெளியில் நின்று கேட்டு தங்களது திட்டத்தில் மண்விழுந்ததை உணர்ந்தாலும் உஷாராகிய சின்னவள்...

“அது எப்படி மாமா... ஊரு என்ன சொல்லும்...? வயசான மாமாவை தனியா விட்டுட்டு போயிட்டாங்கனு வீணா பழித்து பேசும்.. அது வேணாம் மாமா இப்படியே இருந்துட்டு போவோம்."

“ஊரு... நாம என்ன செய்தாலும் அதற்கு எதிர் மறையா தான் சொல்லும். நான் அதைப்பற்றி கவலைப்படவில்லை. இது என்னோட வீடு. நானும் என் மனைவியும் வாழ்ந்த வீடு. கடைசி காலத்துல அவ நினைவோட நான் வாழ நினைக்கிறேன். எனக்கு பென்சன் வருது. மேல்வீட்டு வாடகை வருது. என் நண்பனுடைய பேரன் ஒருபையன் மேல்படிப்பு படிக்கிறதுக்கு இங்க வந்து தங்கிக்கிறேன்னு சொன்னான். நானும் சம்மதம் சொல்லீட்டேன். வேலைக்கு ஒரு ஆள வச்சிக்கினா போவுது... நீங்க உடனே வீடுபார்த்து குடியேற வழியைப் பாருங்க...“ சுந்தரம் சொல்லிவிட்டு நாளிதழைப் புரட்ட ஆரம்பித்தார்.

அறையைவிட்டு வெளியே வந்த நால்வரும் முகத்திலும் ஈயாடவில்லை..!

அவர்கள் போட்டதிட்டம் நிறைவேறவில்லை..!

மறுநாள் தனிவீடு பார்க்க தொடங்கினார்கள்..!

கடலில் உருவாகும் அலைகளெல்லாம் கரையை தொடுவதில்லை.!

எழுதியவர் : முகநூல் (24-Jul-17, 2:16 am)
சேர்த்தது : குமரிப்பையன்
பார்வை : 586

மேலே