இங்கு ஆட்சிகள் வெறும் காட்சியாய்

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் தொடருது
செருப்பினை கொண்டு தங்களை தாங்களே
அடித்துக்கொண்டதாக செய்தி வருகுது
இன்னும் என்ன என்னவெல்லாமோ சொல்லுது

புகைப்படம் பார்த்ததும் மெய்யாலுமே மனசு வலித்தது
செய்தி முழுவதும் படித்து முடித்ததும் கோபம் பொங்கி வந்தது

அவர்களின் கோரிக்கைகளை கண்டுகொள்ளாத
அவலங்களை ஆறுதலாக என்னவென்றுகூட கேட்காத
ஈரமற்ற மோடி அரசாங்கத்தின் மிதப்பு மீது கொஞ்சம் வந்தது

தமிழக விவசாயிகளின் வயித்திற்கான உரிமை கூக்குரலை
தன் இனத்தின் பிரச்சனை என்று முன்னெடுத்து செல்லாமல்
"அவர்கள் தனிவிருப்பம்" என்று தள்ளிநின்று பார்க்கும்
வீரமற்ற எடப்பாடி அரசாங்கம் மீது கொஞ்சம் வந்தது

அந்த செருப்புகளை செலுத்த வேண்டிய திசை தெரியாமல்
தங்களை தாங்களே அடித்துக் கொண்ட அந்த விவசாயி மேலே
அதை விட அதிகமாய் வந்தது

அடிமேல் அடித்தால் அம்மியும் நகரும்
என்று நீங்கள் நினைத்தீர்களோ
அடிக்க தோன்றினால் அடித்து விடுங்கள்
அது நிச்சயமாய் உங்களை இல்லை

குழந்தையின் அழுகுரல் கேட்காதவள் தாய் என்று சொன்னால் தகுமா
மந்தையின் ஓசை கேளாதவன் மேய்ப்பாளன் என்று கூறினால் சரி ஆகுமா

குடிமகன் குரல் கேளாதவன் கிரீடம் சூடிக்கொண்டாலும் மன்னன் என்று ஆகுமா
ஜனநாயத்தின் அழுகுரல்க்கு செவிசாய்க்காத அரசாங்கம் நடத்துவது ஆட்சி ஆகுமா

இங்கு ஆட்சிகள் வெறும் காட்சியாய்
உங்க கண்ணீருக்கு யாரு சாட்சியோ

அரசின் தலை எழுத்தை எழுதும் பேனா
நாம் ஓட்டுப்போடும் மையில்
நாளை அரசன் யாரென்று சொல்லப்போகும் ஓட்டு
நம் ஒவ்வொருவர் கையில்
நாளை உன்னை பிச்சைக்காரனாக்கி ஓட்டுக்கு தரும் காசை
நீ போடாதே பையில்
நிமிர்ந்து மறுத்து நேர்மையாளனுக்கு ஓட்டளித்து இன்று வாட்டும் ஊழல்வாதிக்கு
நாளை போடு மண்ணை வாயில்

நாளை நாளை எனக் காத்திருந்தே
நகருது நாட்களும்
தேயும் நம்பிக்கைகளும்
கேட்கப்படா குரல்களும்
நிறைவேறா திட்டங்களும்
தீர்க்கப்படா பிரச்சனைகளும்
விவசாயின் கண்ணீரும்

நீங்க யாரோ நான் யாரோனு இருக்க முடியல
உங்க சோறை தான் தினமும் விழுங்குறேன்
அதனால தான் நானும் இதை எழுதுறேன்

உங்கள் செருப்புகளை உங்கள் காலிலே விட்டிருங்கள்
உழைத்து காய்ந்த உங்கள் பாதங்களை காக்க!
உங்கள் துடைப்பங்களை பாரத பிரதமருக்கு பரிசாக தலைநகரில் விட்டு வாருங்க
இந்தியாவில் சுத்தப்படுத்த வேண்டிய இடங்களும் மனசும் இன்னும் எத்தனையோ இருக்க!!!

உங்களை மடி சேர்க்க செம்மண்ணும்
உங்கள் அழுகை துடைக்க மழையும்
உங்களை அணைத்துக்கொள்ள காத்தபடி
நீங்கள் நம்மண் திரும்பும் நாள் பார்த்தபடி !!!!

யாழினி வளன் ....

எழுதியவர் : யாழினி வளன் (24-Jul-17, 2:51 am)
சேர்த்தது : யாழினி வளன்
பார்வை : 86

மேலே