கஸல் காதல் கவிதைகள் ===================

உன் கைபிடித்து நடப்பதற்காக
கால்கடுக்க நின்று கொண்டிருக்கிறது மனசு
கால்கடுக்க நின்று நின்று
கனவுகள்தான் கண்டு கொண்டிருக்கிறது வயசு

கண்ணிரண்டால் கூவிக் கூவி
நீ கனவு விற்கும் வியாபாரி
கனவை காதல் என்று நம்பி
நான் கலங்கி நிற்கும் ஏமாளி

கனவிலும் கண்ணுறங்க மறுத்து
காதல் குழந்தை அடம் பிடிக்கிறது
விழித்ததும் மீண்டெழுந்து கொண்டு
நினைவுகள் மறுபடி படம் பிடிக்கிறது

நினைவுகளின் தேன் மழைக்கு
குடைபிடிக்கப் போவதில்லை
நனைவதனால் வரும்சுகத்தை
தடைவிதித்து ஆவதில்லை.

இலைகளோடும் முற்களோடும் ஒரே ஒரு
காம்புடனும் காத்திருக்கிறது ஒருசெடி
இதழ்களோடும் பனித்துளியோடும் அதிலொரு
ரோஜாவாக பூத்துவிடு சிறுநொடி.

வசந்தகாலம்தான். உன் வருகையில்லாமல்
நறுமணம் கமழவில்லை பூஞ்சோலை.
கொலுசணியாமல் ஓசையின்றி நீ வா
யாருக்கும் சொல்வதில்லை மாஞ்சோலை.

இப்போதைக்கு நீ என்னை விரும்ப வேண்டும்
என்று விரும்புவது எனது விருப்பமல்ல
நான் உன்னை விரும்புகிறேன் என்பதையாவது
விரும்பட்டும் உன் மனது தடுக்கவில்லை
*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (26-Jul-17, 10:05 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 186

மேலே