முத்தங்களால் நெய்த மழை

நினைவின் இழைகளால்
நீ நெய்த கம்பளியைத்தான்
உன் பிரிவுக்குளிரில்
நான் போர்த்திக்கொள்கிறேன்

இரவுக்குடுவையில் ஊற்றிய
இருளைக் குடித்துக்கொண்டே
ஒளியால் செய்த உன்னை
கனவில் காண்கிறேன்

மௌனங்களால்
அறையும் உன்னை
வார்த்தைகளால் தழுவுகிறேன்
மெல்லக் கொல்லும்
காதல் விஷத்தை
மீண்டும் ஒருமுறை பருகுகிறேன்

இதோ
காதல் வெள்ளம் கரைபுரண்டோட
மீட்புப் படகுகளில்
நீ ஓட்டையிடுகிறாய்
நான்
துடுப்புகளை எல்லாம்
வெள்ளத்தில் வீசிவிட்டு
மழையில்நனையும் உன்கன்னத்தில்
முத்தமிட்டுச் சிரிக்கிறேன் !

@இளவெண்மணியன்

எழுதியவர் : இளவெண்மணியன் (28-Jul-17, 4:50 am)
சேர்த்தது : இளவெண்மணியன்
பார்வை : 343

மேலே