திங்கட்கிழமை

கடந்த ஏழு நாட்களின்
மொத்த தூக்கத்தையும்
கண்களில் நிரப்பிவிட்டு
'நான் வந்துவிட்டேன் , எழும்பு '
என காதில் கூச்சலிடுகிறாய் !

இரண்டு நாட்களாய்
சேர்த்து வைத்த
செல்ல செல்ல
சோம்பேறித்தனங்கள்
மேல் ஏறி நடக்கிறாய் !

என் நிதானங்களை
தூக்கி குப்பையில்
எரிகிறாய்!

காலை காபியின்
கசப்பையும் சூட்டையும்
தொண்டை
ரசித்து ரசித்து
உள்வாங்கும் போது,
என் சங்கை பிடித்து
தலையை திருப்பி
கடிகார முள்ளை காட்டி
'ஓடு' என
எட்டி மிதிக்கிறாய் !

காற்றலையில்
மிதந்து வரும்
அழகிய பாடல்
வரிகளை முணுமுணுக்கையில்
ஹாரன் சத்தங்களையும் ,
பெல் சத்தத்தையும்
ஞாபகபடுத்துகிறாய் !

ஆவி பறக்க
வரும் என்
காலை சிற்றுண்டியை
உண்ண ஆரம்பிக்கையில் ,
'அடுத்த ஐந்து
நாட்களுக்கு
உன் வாழ்வில்
'அவசர நிலை பிரகடனம்'
அமலுக்கு வருகிறது' என
ஆணையிடுகிறாய் !

கருணையற்ற
திங்கட்கிழமையே !

விடுமுறையோடு
நீ வரும் வரை
நான் உன்னோடு
சண்டை .... !

எழுதியவர் : அனுசுயா (31-Jul-17, 3:44 pm)
பார்வை : 303

மேலே