உன்னோடு சில பொழுதுகள்

இடப்பக்க மார்பு சாய்ந்து
இதமாய் துயில் கொண்ட
பொழுதுகளும் !

தோள் சாய்ந்து சோகமாய்
கண்ணீர் சிந்திய சிறு
பொழுதுகளும் !

விரல் கோர்த்து பேசிக்கொண்டே
நடந்த பொழுதுகளும் !

இருசக்கர வாகனமா ! இறக்கை வைத்த
விமானமா எனும் குழப்பதிலே உன்னோடு
சுற்றிய பொழுதுகளும் !

இன்று ஏன் என்னை பார்க்க வரவில்லை
என்று சண்டையிட்டு சண்டையிட்டு கழிந்த
பொழுதுகளும் !

கால்கொலுசை அணிவித்து என் கைகளால்
தாங்கி பிடித்து இருந்த சிறு கணப்பொழுதுகளும் !

சோகமோ ,சுகமோ ,உள்ளார்ந்த உணர்வுகளை
ஒருவருக்கொருவர் பகிர்ந்த பொழுதுகளும் !

கெஞ்சி கெஞ்சியே சமாதானம் செய்யவேண்டும்
என்பதற்காய் ! நீ பொய்க்கோபம் கொண்ட பொழுதுகளும் !

அத்தனை கவிதைகளையும் வாசித்து விட்டு
"முத்த " கவிதைக்கு மட்டும் ! வெட்கத்தால் நீ
சிவந்து போன பொழுதுகளும் !


என்னை விட்டு போகாதே ! என்னை விட்டு போகாதே
என்று நீ அழுது அழுது கண்ணீர் வற்றிய பொழுதுகளும் !

யாவுமே உன்னோடு பொன்னான பொழுதுகளாய்
கழிந்து போனதடி !

இன்று என் பொழுதுகள் யாவும் நீயின்றி
உன் நினைவுகள் சுமந்த வெற்று பொழுதுகளாய்
வெறுமனே கழியுதடி !

எழுதியவர் : முபா (31-Jul-17, 4:05 pm)
பார்வை : 595

மேலே