என்ன செய்வேன் தெரியவில்லை

என்ன செய்வேன் தெரியவில்லை
முடிந்த மட்டும் அழுது தீர்க்கிறேன்
எவரிடம் சொல்வேன் அறியவில்லை
விடிந்த பின்னும் உறங்காது கிடக்கிறேன்

பார்க்க பார்க்க அன்று மயங்கினேன்
சிறுமொட்டு பூவாகித்தான் விரிந்தேன்
தீர்க்க தீர்க்க இன்று அழுகிறேன்
சிறுபொறி தீயாகிநான் எரிந்தேன்

துளிவிடும் மேகங்கள் விழும் இலைகள்
சேர்ந்து அழுகிறது என் ஆற்றாமையில்
உன்விழி வளர்த்த ஆசையின் தழைகள்
வாடி போகிறது நீர் ஊற்றாமல்

எதனோடும் ஒட்டாத யுவதி மனம்
தனித்தே நிற்கிறது எவரும் தேற்றாமல்
யார்சொல்லும் கேளாமல் அது தினம்
பனித்தே கரைகிறது தனை மாற்றாமல்

காத்து காத்து நேற்றுவரை
வராதஉன் வாசல் அருகில் நின்றேன்
தவித்து தவித்து பின்புநீ
தராதஉன் நினைவுகளை மட்டும் தின்றேன்

பார்த்து பார்த்து கட்டிவைத்தேன்
கனவுகளில் கோர்த்தவற்றை கைகளில் கலைத்துவிட்டாய்
சேர்த்து சேர்த்து உடைத்துவிட்டாய்
சிதறியகாசு சேகரிக்கும் சிறுமி அஆகிவிட்டேன்

என்ன செய்வேன் தெரியவில்லை
முடிந்த மட்டும் அழுது தீர்க்கிறேன் ....

எவனோ ஒருவன் பாடல் மெட்டுக்கு வரி எழுதி பார்த்தேன் .. முயன்று பார்க்க ..
திருத்தங்கள் தவறுகள் இருந்தால் தவறாமல் சொல்லுங்கள் என் எழுத்தை வளர்க்க ...
யாழினி வளன்

எழுதியவர் : யாழினி வளன் (20-Aug-17, 2:18 am)
பார்வை : 167

மேலே