இறைவனின் படைப்பாற்றல்

வல்லமை இதழ் நடத்திய
படக்கவிதைப்போட்டியில்
எழுதிய தலைப்பும் கவிதையும்..

===========================
இறைவனின் படைப்பாற்றல்..!
===========================


அற்புதக் காட்சியொன்றை கண்டுவிட்டால் அதன்
……….அழகைப் படம்பிடித்து மூளைக்கனுப்பும் நம்மனது.!
கற்பனைத் தேரிலேறி காட்சியோடது ஓடும்போது
……….கட்டுக்கடங்கா மகிழ்வும் புத்துணர்ச்சியு மதிலெழும்.!
சுற்றிலும் அலைபாயும் அம்மனத்தைக் கட்டுப்படுத்த
……….சுகமாயங்கே காட்சிதரும்கடலும் மேகமும் நிலவும்.!
பற்றுமிக்கப் புலவர்களதை பார்த்துவிட்டால் போதும்
……….பாட்டோடதைப் பண்ணுடன் பாமாலையாக்கி விடுவர்.!

விண்ணைப் படைத்தானிறைவன் தொடரும் அதனுடன்
……….விரிகதிர் மதியொடு விண்மீனும் மேகமும் படைத்தான்.!
மண்ணினைப் படைத்தான் மண்ணொடு தொடரும்
……….மலைகளும் மூவகை உயிர்களும் படைத்தான்..!
தண்ணீரைப் படைத்தான் தொடரும் அதனுடன்
……….பன்னெடும்நதி கொடுக்கும்மழை கொடுத்ததுடன் புவி..
மண்டலத்தில் காற்றைப் படைத்தான் அதனால்
……….பூங்காற்று தென்றலொடு உயிர்மூச்சைக் கொடுத்தான்.!
தணலென நெருப்பைப் படைத்தான் அதனால்
……….எதையும் இயங்கவைக்கும் எரிசக்தி படைத்தான்.!

எத்துணையோ நுண்ணுயிரும் மண்ணுயிரும் புவியுலகில்
……….இயற்கையாகத் தோன்றவொரு நெறிவகுத்தான் இறைவன்.!
வித்தாக அவையெல்லாம்….விதையொன்றைப் படைத்தான்
……….வியந்துநோக்க எவ்வுயிர்க்கும் கண்களைப் படைத்தான்.!
அத்தனையும் கண்டுகளித்து அனைத்தையும் பாதுகாக்க
……….பஞ்சபூத இயற்கையினைப் படைத்தனைத்தையும் காத்தான்.!
இத்தனையும் விண்மண் நீர்நெருப்பு காற்றென விரியும்
……….இறைவனின் படைப்பாற்றலை யதிசயித்துப் பாடுகிறேன்.!

=====================

நன்றி :: கூகிள் இமேஜ்

எழுதியவர் : பெருவை பார்த்தசாரதி (21-Aug-17, 10:30 pm)
பார்வை : 316

மேலே