எட்டிய சாரம்

நடித்திடநான் பழகிவிட்டேன் நாளெல்லாம் பழகிவிட்டேன்
நாளுமொரு கவலையிலை என்றே - என்
நல்லசொற்கள் சொல்லிடுமே இன்றே - பல
அடிவாங்கிப் பழகிவிட்டேன் ஆடியாடி அறிந்துவிட்டேன்
அகம்மூடப் பழகிவிட்டேன் முன்பே - என்
அடையாளம் மறைத்துவிட்டேன் பின்பே !

நாளெல்லாம் நாடகமாய் நாம்வாழும் பூமியிலே
நல்லவரைத் தேடுவதை விட்டேன் - அட
நானும்கூட தீவினையால் பட்டேன் - இனி
வேளையெலாம் நான்செய்யும் வேலையொன்றே போதுமென்று
வேஷமிடக் கூடவழி கற்றேன் ! - என்
வேதனையை நான்மறைத்த லுற்றேன் !

ஆடுகின்ற மனப்பேயை அடக்கிவிட வழிதேடி
அனுபவமே அந்தவழி கண்டேன் - அதை
அடையுவழி எனமௌனம் கொண்டேன் - பொருள்
தேடுவதே மனிதகுணம் தேடவைப்ப திறைவன்மனம்
தேடுதலை விட்டொழிக்க வந்தேன் - என்
தேவையெலாம் அவனிடத்தில் தந்தேன் !

மேலிருக்கும் வேளைவரை கீழிருக்கும் மூடமனம்
மேன்மைகளை ஏற்றுவிடத் தோற்கும் - அது
மேலும்படி கீழிறங்கப் பார்க்கும் - வரும்
தோலிறுக்கம் நேரும்வரை ஓர்குழியில் வீழும்வரை
தோன்றுவதே இல்லையுயர் ஞானம் - அது
தோன்றிவிட்டால் போய்விடுமே மானம் !

முன்னிலையில் புகழுபவர் பின்னிருந்தால் இகழுவதை
முழுவதுமாய் நேரில்கண்டு நொந்தேன் - அது
முற்றிலும் விஷங்கலந்த செந்தேன் ! - எனக்கு
என்னபணி என்னகடன் ஏதுமறி யாமலுறும்
ஏழ்மையில் கழித்திருந்த நேரம் - அற
என்னறிவுக் கெட்டியதே சாரம் !

-விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (23-Aug-17, 12:28 am)
சேர்த்தது : விவேக்பாரதி
பார்வை : 59

மேலே