கேட்டேன்

பிறப்பின்
வருவது யாதெனக்
கேட்டேன்
பிறந்து பாரென
இறைவன்
பணித்தான் !
படிப்பெனச்
சொல்வது யாதெனக்
கேட்டேன்
படித்துப் பாரென
இறைவன்
பணித்தான் !
அறிவெனச்
சொல்வது யாதெனக்
கேட்டேன்
அறிந்து பாரென
இறைவன்
பணித்தான் !
அன்பெனப்
படுவது என்னெனக்
கேட்டேன்
அளித்துப் பாரென
இறைவன்
பணித்தான் !
பாசம்
என்பது யாதெனக்
கேட்டேன்
பகிர்ந்து பாரென
இறைவன்
பணித்தான் !
மனையாள்
சுகமெனில்
யாதெனக்
கேட்டேன்
மணந்து பாரென
இறைவன்
பணித்தான்!
பிள்ளை என்பது யாதெனக்
கேட்டேன்
பெற்றுப் பாரென
இறைவன்
பணித்தான் !
முதுமை என்பது யாதெனக்
கேட்டேன்
முதிர்ந்து பாரென
இறைவன்
பணித்தான் !
வறுமை என்பது என்னெனக்
கேட்டேன்
வாடிப் பாரென
இறைவன்
பணித்தான் !
இறப்பின்
பின்னது ஏதெனக்
கேட்டேன்
இறந்து பாரென
இறைவன்
பணித்தான் !
'அனுபவித்தேதான்
அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன் '
எனக் கேட்டேன்!
ஆண்டவன்
சற்றே அருகு நெருங்கி
' அனுபவம்
என்பதே நான்தான்'
என்றான்!

எழுதியவர் : kd (7-Aug-10, 11:28 am)
சேர்த்தது : சுரேஷ்குமார்
பார்வை : 726

மேலே