காக சந்தேசம்


கவி அரங்கம்
முதல் கவிஞர் கவிதையை படித்தார்
தலைப்பு காக சந்தேசம் என்றார்
சினத்துடன் எழுந்தார் சென்ற ஆண்டு
பரிசு பெற்ற கவிஞர்
காளிதாசனின் மேக சந்தேசம் கேள்விப்பட்டிருக்கிறேன்
இது என்ன காக சந்தேசம் ;அபத்தம்

கவித் தலைவர் கை அமர்த்தினார்
கவிதை எழுதுவதற்கும் படிபதற்கும்
பொறுமை தேவை கவிதை படைப்பல்லவா
சர்ச்சையை பின் வைத்துக் கொள்ளலாம்
கவிஞரே நீர் தொடரும்
தொடர்ந்தார்

கா கா கா கா
கா கா கா கா
கா கா கா கா
கா கா இதுவா கவிதை என்று சினந்தார்
சினக் கவிஞர்

நானென்ன குயில் சந்தேசமா பாடுகிறேன்
கூ கூ கூ என்று எழுதுவதற்கு
இல்லை கோழி சந்தேசம் பாடுகிறேனா
கொக்கரகோ என்று எழுதுவதற்கு
காக சந்தேசம் கா கா என்றுதான் இருக்கும்
பொறுத்துப் பாரும்

இன்னும் அதெல்லாம் வேற இருக்கா
போகிற போக்கைப் பார்த்தால்
கருவாட்டு சந்தேசம் போடுவீர்கள்
போல இருக்கு

துள்ளி விழும் மீன் கயல் காதலியின் கண்
மடிந்தால் உலர்ந்தால் கருவாடு
காதலிக்கு சந்தேசம்
எஸ் எம் எஸ் இமெயில் விட பாஸ்டர்
சினந்து சொன்னாலும் கருத்து அருமை அருமை
தொடரட்டுமா

ம்...தொடரும் என் பாக்கியம்

அரங்கில் கரகோஷம்
கவி அரங்கம் களை கட்டிவிட்டது
என்று ரசிகர்களின் ஆரவாரம்

தொடர்ந்தார் கவிஞர்
கா கா கா
கா கா கா ....
கவித் தலைவர் குறிக்கிட்டார்
இன்னும் எத்தனை பக்கம்
ஓரிரு பக்கங்கள்
சரி படியும் கவிதைக்கு பொறுமை தேவை
கா கா என்று பக்கங்கள் புரண்டன
கா கா என்று காகம் கத்தி முடித்திட
காதலி வந்தாள் காகம் அவளிடம் சென்றது
காகத்தின் காதில் காதலி காதலனுக்கு
சேதி சொன்னாள் காகம் வானில் பறந்தது

கவித்தலைவர் ஒரு சந்தேகம் என்றார்
சந்தேசத்தில் சந்தேகமா கேளும் என்றார் கவிஞர்
இத்தனை கா கா விற்குப் பிறகு
காதலி வருகிறாள் காதலிக்கு காது மந்தம்
என்பதை சூசகமாக சொல்கிறீரோ
என்ன நாம் நினைக்காததை எல்லாம்
சொல்கிறார்
ஆம் ஆம் சரியாக யூகித்தீர்கள்
கவிஞன் மனம் ஒரு நல்ல கவிக்னுக்குத்தான்
தெரியும் என்று சினக் கவிஞரை ஒரு
பார்வை பார்த்தார்

முதற் கவிதையே சிறந்த கவிதை
காக சந்தேசத்திற்கே பரிசு
மற்ற கவிஞர்கள் அடுத்த கவி அரங்கத்தில்
கவிதை பாடலாம் என்று அறிவித்தார்

ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்து
விசில் அடித்தனர்
ஒரு ரசிகர் கேட்டார் கருவாட்டு சந்தேசம்
எப்போது ?
கவிஞர் உற்சாகத்துடன் கை உயர்த்தி
சொன்னார்
கூடியவிரைவில் மணக்கும்

----கவின் சாரலன்





எழுதியவர் : கவின் சாரலன் (27-Oct-11, 4:47 pm)
பார்வை : 1084

மேலே