தமிழ் மொழி புனைவு ....... சிறுகதை

இறைவனும் இறைவியும் பூலோகத்திற்கு வந்தார்கள். ஒரு சிறுவன் மரத்தின் மீது நுனிக்கிளையில் அமர்ந்து அடிக் கிளையை வெட்டிக் கொண்டிருந்தான். பார்த்த இறைவி பதற்றமானாள்.

"ஐய்யோ கிளை முறிந்தால் சிறுவனும் விழுவானே" என்று துடித்தாள். "அமைதியாக இரு தேவி. பிறந்தவர்கள் எல்லோரும் ஒருநாள் இறந்துதானே ஆகவேண்டும்" என்றார் இறைவன். "அது சரி சாமி. அவன் சிறுவன் சாகும் வயது இதுவல்லவே" என்றாள்,

"ஆறிலும் சாவு நூறிலும் சாவு விதியின் விளையாட்டு உனக்குத் தெரியாதா என்ன? " "இல்லை சாமி அவனை எப்படியாவது காப்பாற்ற வேண்டும்" எனக் கெஞ்சினாள் இறைவி.

"சரி, கீழே விழுபவன் அம்மா என்று அலறினால் நீ போய் தாங்கிப் பிடி. அப்பா என்று அலறினால் நான் போய் தாங்கிப் பிடிக்கிறேன்" என்றார் இறைவன். உடன்பாடு ஒப்புதலானது.

அந்நேரம் மிகச் சரியாகக் கிளையும் முறிந்தது. சிறுவனும் கீழே விழுந்தான். செத்தான்.

இறைவனோ, இறைவியோ காப்பாற்றவே இல்லை. ஏனென்றால் சிறுவன் 'மம்மி' என்று அலறிக் கொண்டே கீழே விழுந்தான்.

செ. சத்யாசெந்தில்,
முதுகலை தமிழ் முதலாம் ஆண்டு,
மைலம் தமிழ் கல்லூரி,
விழுப்புரம் மாவட்டம்,
தமிழ்நாடு - இந்தியா.

எழுதியவர் : செ.சத்யாசெந்தில் (25-Nov-11, 6:06 pm)
பார்வை : 529

மேலே