நண்பர்களின் வேண்டுகோளுக்காக..!

எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வோம்-கட்டுரைத் தொகுப்பு.

இந்த இணையத்தில் இணைந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம்.!
எழுத்தின் மீது கொண்ட காதலால் அனைவரும் படைப்பாளிகளாக இருக்கிறீர்கள் நன்றி.!
ஆனால் படைப்புகள் எல்லாம் எதனைப்பேசுகின்றன.? என்று பார்த்தால் அதிகமாக காதலை மட்டுமே..? ஏன் காதல் மட்டும் பாடுபொருள் இல்லையா..? என்று சிலருக்கு அல்ல,பலருக்கும் கேள்வியிருக்கும்..
காதலும் பாடுபொருள்தான் அதைப்பற்றி இங்கு யாரும் குற்றம் சொல்லவில்லை.
இங்கு நான் சொல்லவருவது காதல் மட்டுமே பாடுபொருள் அல்ல என்பதைத்தான்.

அன்புள்ள நண்பர்களே..! ஒரு விஷயத்தை தெரிந்துகொள்ளாமல் இருப்பது அறியாமை அல்ல.தெரிந்து கொள்ள முயற்சிக்காமல் இருப்பதே அறியாமை.

இங்கே உங்களுக்கு அன்போடு குறிப்பிட வேண்டிய ஒரு விஷயம் உள்ளது.
இதற்கு மேல் தொடர்ந்து படிப்பதும்,தவிர்ப்பதும் உங்கள் விருப்பம்.!
அதே சமயம் இதனைப் படிப்பவர்கள் உங்கள் பின்னூட்டங்களையும் இதில் பதிவு செய்யலாம்.உடன்பட்டோ,முரணாகவோ,விமர்சனமாகவோ எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும்.அவை எல்லாவற்றையும் உள்ளடக்கி நாம் தொடர்ந்து எழுதுவோம்.இது உங்களுடையது,உங்களுக்கானது..!—

கவிதை,கட்டுரை,நாடகம்,சிறுகதை இன்னும் எழுத்தின் வடிவமாக இருக்கும் எல்லாப் படைப்புகளுக்கும் அடிப்படையாக இருப்பது மொழி.இம்மொழியின் சிறப்பாக உள்ளது எனப்பார்த்தால்,மனிதமனங்களின் உணர்ச்சிகள் அத்தனையையும்,வெளிப்படுத்தக்கூடிய வகையில் வார்த்தைகளும்,அதற்கான குறியீடுகளாக எழுத்துக்களும் இருப்பதே சிறப்பு.இதில் எந்தக்குறையும் இல்லாமலிருப்பது தமிழ்.அதனால்தான் அது செம்மொழி என்று அங்கீகரிக்கப்படுகிறது.

இவ்வளவு சிறப்புவாய்ந்த மொழியை,பயன்படுத்தும் நாம்,அந்த மொழியில் வெளிப்படுத்தும் உணர்வுகளாக,என்னவெல்லாம் படைக்கமுடியும்.?.கருவுறும் குழந்தையின் நிலையிலிருந்து,அது வெற்றிகரமாக பிறந்து, வளர்ந்து, படித்து, காதலித்து.மணம்முடித்து,குடும்ப பாரம் சுமந்து,தனது பொறுப்புக்களை எல்லாம் நிறைவேற்றி,முடிந்த அளவிற்கு பிறருக்கும்,மனதாலோ,செயலாலோ,உடல் உழைப்பாலோ உதவிசெய்து,முதுமை எய்தி,முடிவில் மனிதராக வாழ்ந்து காடு செல்லும் வரையிலுள்ள அனைத்து வாழ்வியல் அனுபவங்களையும் படைக்கமுடியும்.இந்த அனுபவங்களின் ஒவ்வொரு கட்டத்திலும் அதன் கிளைகளாக நாம் சந்திக்கும் அனுபவங்கள் எத்தனையெத்தனை..?

அதுகுறித்து நமது மனங்களில் தோன்றும் உணர்ச்சிகள்,அது ஏற்படுத்தும் விளைவுகள்,அதன் முடிவுகள்..என எவ்வளவோ உண்டு.
இவை அனைத்தையும் நாம் எழுத்தில் வடிக்கமுடியும்.!

ஆமாம் முடியும்தான்..! ஆனால் எதற்காக..?.

எழுத்தில் வடிக்கக் கூடிய,படைக்கவேண்டியவற்றைக் குறித்து பேசலாம் என்று தொடங்கிவிட்டு,இப்போது ஏதோதோ எழுதுவதாய்த் தோன்றுகிறதே..என்று சிலருக்கு எண்ணமிருக்கலாம்.அதில் தவறில்லை.ஆனால் ஏன் நமது படைப்புகளில் குறிப்பிட்ட சில உணர்ச்சிகள் மட்டுமே பிரதிபலிக்கின்றன என்று அறிந்துகொள்ள வேண்டாமா..?.இவ்வாறு நாம் மாறிப்போனதற்கான காரணம் பல நூற்றாண்டுகளின் வரலாறாக உள்ளது என்று தெரிந்து கொண்டால் நீங்கள் ஆச்சரியப்பட மாட்டீர்கள்.அதற்காகத்தான் சற்று விரிவாகவே சொல்ல விரும்புகிறேன்.-

இனி கட்டுரையின் தொடர்ச்சி..,
நாம் ஒவ்வொருவரும் இந்த சமூகத்தில் பின்னிப்பிணைந்திருக்கிறோம். அதனால்தான் சமூகத்தின் அலகு மனிதன் என்று குறிப்பிடுகிறோம்.மீட்டரின் அலகு மில்லிமீட்டர் என்பதுபோல.
இன்னும் சொல்லப்போனால்,நீங்கள் வாழ்வதற்கு,உங்களுக்கு இந்த சமூகம் தேவைப்படுவது போலவே,சமூகத்திற்கும்,ஏதோ ஒருவிதத்தில்,நீங்கள் தேவைப்படுகிறீர்கள்.
உங்கள் ஆரோக்கியத்திற்காக உங்கள் வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்வதில் தொடங்கி,நீங்கள் வாழும் சமூகத்திற்காக,இந்த நாட்டை சுத்தமாக வைத்துக் கொள்வது வரை,
சமூகம் சுத்தமாக இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் ஊழலை ஒழிக்கவேண்டும் என்று உண்ணாவிரதங்கள் முதல் பல்வேறு போராட்டங்கள் நடைபெறுகிறது.அதே சமயம் ஊழலின் ஊற்றுக்கண்ணான,தனிமனிதர் பெறும் லஞ்சம் என்பதற்கு எதிராகவும் கிளர்ச்சிகளும்,போராட்டங்களும்,வழக்குகளும் நடைபெறுகின்றன.
சமூகம் சுத்தமாக இருக்கும்போது நாமும்,நாம் சுத்தமாக இருக்கும்போது சமூகமும் சுத்தமாக இருப்பது என்பது தவிர்க்க முடியாத இயற்பியல்விதியைப் போல.

சரி சமூகத்தை சுத்தப்படுத்துவதற்கு என்ன செய்யவேண்டும்.? என்பதைப் பார்க்கும் முன்,சமூகத்iதை ஆரோக்கியமற்ற சூழலில் வைத்திருப்பவை என்னவெல்லாம் என்று பார்ப்போமா..?

உங்கள் எல்லோருக்கும் தெரிந்த விஷயத்திலிருந்தே தொடங்கலாம்.
ஊழல்... எதற்காக இது நடைபெறுகிறது.?.ஊழல் என்பது மிகப்பெரிய அளவில்,சட்டவிதிகளுக்கு முரணாகவும்,நியாய,தர்மங்களுக்கு எதிராகவும் சேர்க்கப்படும் மிகப்பெரிய அளவிலான பணம்தான்.அல்லது எப்போது வேண்டுமானாலும் பணமாக மாற்றிக்கொள்ளத்தக்க வகையிலான சொத்துக்கள்.அது தங்கம்,பிளாட்டினம்,நிலம் என்று எப்படிவேண்டுமானாலும் இருக்கலாம்.
இவை எதற்காக சேர்க்கப்படுகின்றன.?

மனிதன் தனது ஆசைகளாக எதை நினைத்தாலும் அதை செய்து முடித்துக் கொள்ளத்தானே..?.ஆசைகள் என்று பார்த்தால் மண்,பொன்,மது,மாது என்று தான் நினைத்ததை,நினைத்த வகையில் அனுபவித்துக்கொள்ளலாம் என்பதுதானே..?.மேலும் தனது சந்ததிகளும்,இதேபோல செல்வச் செழிப்புடன் வாழவேண்டும் என்ற விருப்பம்தானே..!

இங்கே கொஞ்சம் ரிவர்ஸாக யோசித்துப் பாருங்கள்.மனிதனுக்கான ஆகப் பெரும் ஆசைகளாக,மண்,பொன்,மது,மாது என இவற்றில் ஏதோ ஒன்று எனக் கற்பிக்கப்படாமல் இருந்திருந்தால்…எதற்காக சொத்து சேர்க்கவேண்டும்.?.

இது இல்லாமல் வாழமுடியுமா..? என்ற கேள்வி உங்களுக்கு வரலாம்.?
நியாயம்தான்.ஆனால் ஒருமனிதன்,அவனது குடும்பத்திற்கு சொத்துக்களை சேர்த்து வைக்கமால் போனால்,அவனது சந்ததிக்கு எதிர்கால வாழ்க்கை பாதுகாப்பானது இல்லையே..என்ற பயம்தானே காரணம்.?

இந்த பயம் போகவேண்டும் என்றால் அதற்கு என்னசெய்யவேண்டும்.?

சொத்துக்கள் இல்லாவிட்டாலும்,அடிப்படையான வசதிகளோடு யாரும் தங்கள் இயல்பான வாழ்க்கையை வாழமுடியும் என்ற உத்தரவாதம் கிடைத்துவிட்டால்…,
சற்றே யோசித்துப் பாருங்கள்..!.

நமது குழந்தைகளின் விருப்பத்திற்கேற்ற படிப்பு,படிப்புக்கேற்ற,அல்லது சக்திக்கேற்ற வேலை.., குடும்பத்தின் தேவைக்கேற்ற சம்பளம்.அடிப்படை வசதிகளுக்கு குறைவில்லாத வகையில் ஒருவீடு.அன்றாட தேவைகளாய் இருக்கின்ற போக்குவரத்து, மருத்துவம்,இன்னும் குடும்பத்தின் தேவைக்கேற்ற எல்லாமே நிறைவேற்றும் நமக்கான ஒரு அரசு...என்று இருந்தால்..! .. உங்களுக்கு எதற்கு சொத்து..?.

இந்தக் கட்டுரைக்கும்,இங்கே குறிப்பிடப்படும் தனிச்சொத்துரிமைக்கும் என்ன சம்பந்தம்..? அப்படி ஒரு கேள்வி உங்களுக்கு எழுகிறதா..?.
தொடர்பு இருக்கிறது...எப்படி..?.

தேவைக்கு மீறி சொத்துக்களை வைத்திருக்கும்,தனி மனிதர்கள்..அந்த தனிமனிதர்களின் சொத்துக்கனைப் பாதுகாக்கும் வகையில்,அவர்கள் அல்லது அவர்களது பிரதிநிதிகள்..இவ்வாறான மனிதர்கள் இணைந்து,அமைத்துக் கொள்ளும் ஒரு அரசாங்கம்.!

நாட்டுமக்களுக்காக அமையவேண்டிய அரசுகள்,இவ்வாறு தனிமனிதர்களின் நலத்திற்காகவும்,பாதுகாப்புக்காகவும் இருக்கமுடியுமா..?. இந்தச் சொத்துக்களை நாம் ஒன்றிணைந்து கைப்பற்றிவிடமுடியாதா..?.
அது அவ்வளவு எளிதான விஷயமல்ல..!.அவர்களுடைய சொத்துக்களை கைப்பற்றிவிடக் கூடாது என்பதற்காக,அரசின் சட்டதிட்டங்கள் வகுக்கப்படும்.குற்ற வழக்குகள் பதியப்படும்.தண்டணைகள் கடுமையாக்கப்படும்.

தற்போதுள்ள சூழ்நிலையில்,பசிக்காக ஒரு திண்பண்டத்தை எடுத்துப்; புசித்துவிட்டு,அதற்கான பணம் உன்னிடம் இல்லையென்று கடைக்காரரிடம் சொன்னால்,அது குற்றமே.!

வீடுகள் இல்லாத ஒரு குடும்பம்,அரசுக்கு சொந்தமான சாலை ஓரத்தில்
அல்லது சாலையை விட்டு சற்றுத்தள்ளியுள்ள தனியார் நிலத்தில் குடிசை போட்டுக் கொண்டாலும்,அது ஆக்ரமிப்பு என்ற குற்றமே..!

உண்ண உணவில்லாதவனும்,இருக்க இடமில்லாதவனும் இன்னும் இங்கு இருக்கிறானே..? ஏன்.இவர்களுக்கு கொடுக்க அரசிடம் உணவில்லையா..?
வீடுகள் வழங்க நிலமில்லையா..?
எல்லாம் இருக்கிறது.ஆனால் கொடுக்க முடியாது.ஏன் கொடுக்கமுடியாது.,?,
சொத்துக்கள் இருப்பவனைவிட,இல்லாதவன் அதிகம்.அதை அனைவருக்கும் பிரித்துக் கொடுத்துவிட்டால்,தனது சந்ததிக்கென்று அவன் எதை விட்டுப்போவான்.?.
அதனால்தான்,அதைப் பாதுகாப்பதற்கு,அரசு என்ற கருவியையும்,அதன் முலம் பாதுகாப்பையும் படைத்துக்கொள்கிறான்.
அப்படியென்றால்,தனிமனிதனுக்கு சொந்தமாக இல்லாத நிலங்களை, பிரித்துக்கொடுக்கலாமே..?.என்று நீங்கள் கேட்டால்,அதற்கான பதில்..,அரசுக்கு சொந்தமான,அனைவருக்கும் பொதுவாகத்தானே ஒரு காலத்தில் இந்த நிலங்களெல்லாம் இருந்தது.அப்போது அவை எல்லாம் எப்படி தனிமனிதர்கள் கையில் போய்ச்சேர்ந்ததோ..அப்படியேதான் இப்போது வரைக்கும் நடந்து கொண்டிருக்கிறது.இனியும் நடக்கும்.அது கி.மு.2012 ஆக இருந்தாலும் சரி,கி.பி.2012.ஆக இருந்தாலும் சரி.

ஒருபுறம் அரசு என்ற கருவியின் பணி இதுவென்றால்,மறுபுறம் இதற்கு ஆதரவான விஷயங்கள் எதுவென்பதை பார்ப்போம்.

அந்த பட்டியலில் முதலில் வருவது மதம். அது எந்த மதமாக இருந்தாலும் சரி.அந்த மதங்களுக்குப் பொதுவான விஷயங்கள் எதுவென்று பார்த்தால், உயிர்வதை கூடாது.பிறருக்கு தீங்கு செய்யக்கூடாது.பிறன் மனை கவரக்கூடாது. மற்றவனுக்கு சொந்தமான எதையும் திருடக்கூடாது. பொய் சொல்லக்கூடாது. கடவுள் என்பது சாசுவதம்.அதன்மேல் உனக்கு எப்போதும் பயமும்,மரியாதையும் இருக்கவேண்டும்.நேரம் கிடைக்கும்போதெல்லாம் இறைவனையே நினைக்க வேண்டும்.இவைகளைத்தவிர ஏதேனும் சில விஷயங்கள் இணைந்திருக்கலாம். இவற்றை தொடர்ந்து மக்களிடையே பரப்பும் கருவிகளாக வழிபாட்டுத்தலங்கள்.

இவையெல்லாமே நல்ல விஷயங்கள்தானே..ஆமாம் மிக நல்ல விஷயங்களே.
ஆனால் இவற்றையெல்லாம் பெரும்பான்மையாக இருக்கும் ஏழைகள் மட்டுமே பின்பற்றுவதாயும்,பெரும்பணக்காரர்கள் பின்பற்றுவதாக நடிப்பதாகவும்தான் பெரும்பாலும் இருந்தது என்பதற்கு வரலாற்றில் ஏராளமான உதாரணங்கள் உண்டு.காரணம் தெய்வத்தைக் குறித்த அச்சம் அவர்களுக்கு அறவே இல்லை.அச்சமில்லையென்பதால் அவர்கள் வாழ்வில் எந்த ஒரு துன்பமும் நிகழவில்லை.
ஏனெனில்,அடிமைகளாகவும்,கொத்தடிமைகளாகவும்,பணியாட்களாகவும்,ஆண்,
பெண்,குழந்தைகள்,அவர்களின் சந்ததிகள் என வைத்திருந்த பெரும் பணக்காரர்கள் அப்போதும் இருந்தனர்.இவர்களுக்கென தனியான ஒருவாழ்க்கை என்பதை நினைத்துக் கூடப் பார்க்கமுடியாது.இவர்கள் எப்படி வாழவேண்டும் என்று இவர்களின் எஜமானர்களே முடிவு செய்வார்கள்.

இன்னும் சொல்லப்போனால்,தோள் சீலை அல்லது முந்தானைச்சீலைப் போராட்டம் என்று ஒரு விஷயம் நமதுநாட்டில்தான் நடந்தது என்பதை எத்தனைபேர் கேள்விப்பட்டிருப்பீர்கள் என்று தெரியாது.இப்போராட்டம் எதற்காக நடைபெற்றது என்றால்,பெண்கள் தங்கள் மார்புகளின் மீது துணியை இட்டு மறைத்துக்கொள்ளும் உரிமைவேண்டும் என்பதற்காக நடத்தப்பட்ட போராட்டமே அது. போராட்டம் என்றாலே,உரிமைகளைப் பெறுவதற்குதானே,அப்படியானால் அது யாரால் மறுக்கப்பட்டது.?.என்றும் சில தகவல்களை தேடிப்பாருங்கள்.
அப்படியானால் நினைத்துப் பாருங்கள்..,அந்த உரிமை அவர்களுக்கு கிடைக்கும்வரை அவர்களின் வாழ்க்கை எப்படியிருந்திருக்கும் என்று.!

மேலும்,மதத்தின் குறியீடாக விளங்கும் வழிபாட்டுத்தலங்களின் பெயரில் பலநூறு ஏக்கர் நிலங்களும்,தங்கப்புதையல்களும் சேர்க்கப்பட்டு,அவை சில தனிப்பட்ட குடும்பங்கள் நிர்வகிக்கத் தொடங்கி,இன்று அவர்களது சொத்துக்களாகவே மாறிப்போயிருப்பதும் மறுப்பதற்கில்லை.

ஆனால்,இறைஅச்சம் குறித்து,மக்களிடையே தொடர்;ந்து பயம் இருப்பதற்காக, தெய்வத்தின் பிரதிநிதியாக அரசன் என்பவன் கற்பிக்கப்பட்டு, பின்னர் அந்தப் பிரதிநிதிகளே கடவுளர்களாகவும் ஆக்கப்பட்டனர்.
-ஜஇந்திய வரலாற்றில் புஷ்யமித்ரன் என்ற அரசனைக் குறித்துப் படித்திருக்கிறீர்களா..?.
வாய்ப்பு இருப்பின்,தகவல்களைத் தேடுங்கள்.ஸ-
இதனை நிலைநிறுத்திக்கொள்ளும் விதமாகவே,புனைவு இலக்கியங்களும், வரலாறுகளும் படைக்கப்பட்டன.இதனைத் தொடர்ச்சியாக செவிவழிச் செய்திகளாகவும்,நாடகங்களாகவும்,கதாகாலாட்சேபங்களாகவும்,..அவ்வக் காலத்திற்கேற்ற தகவல்பரிமாற்றக் கருவிகளின் மூலம் கேட்டுவருகிறோம்.இன்று வரை அது தொடர்ந்து வருகிறது.
-வரலாறு மிக முக்கியம் அமைச்சரே..என்று,23.ஆம் புலிகேசி படத்தில் வரும் ஒருகாட்சி.இதன் கொச்சையான வடிவமாக இருக்கலாம்,ஆனால்அதில் உண்மையில்லாமல் இல்லை-
-படைக்கப்பட்ட வரலாறுகளைவிட,மறைக்கப்பட்ட வரலாறுகள் மிகஅதிகம்.!.-

எவ்வளவோ நல்ல விஷயங்களைக் குறித்துப் பேசும் மதங்கள்,வேதகாலம் தொட்டு சுமார் ஐந்தாயிரம் வருடங்களாக இம்மண்ணில் இருந்தும்,அதில் சொல்லப்பட்ட நல்ல விஷயங்கள் நடைபெறவில்லையே.இவ்வளவு ஆண்டுகாலப் பழமையிருந்தும்,மனிதர்களுக்கு அது பழக்கமாகவில்லையே.ஏன்.?
உங்களை நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டாமா..?.

கோவில் பூசாரியாக இருப்பவர் உண்டியல் உடைப்பதும்,பாதிரிகள், சிறுமிகளைக்கூட கற்பழிப்பதும்,மவுலானாக்கள் வரதட்சணை வாங்குவதும் நாம் ஒன்றும் கேள்விப்படாத செய்திகள் அல்லவே.

எப்போது நமது பயனுக்கான ஒரு கருவி,நமக்குப் பயன் படவில்லையோ.. அப்போது அதனால் என்னபயன்.?.காலப்போக்கில் அது கண்டிப்பாக மறைந்துவிடும் என்பதில் சந்தேகமில்லை.
பக்தி இயக்கங்கள்,பக்தி இலக்கியங்கள்,பக்தியைச் சொல்லும் திரைப்படங்கள்,பாடல்கள்,கதைகள் என,அது சார்ந்த படைப்புகள்,இப்போது குறைந்துவிட்டதே அதற்கு சாட்சி.இன்னும் அதன் மிச்சங்களும் அழிவதற்கு சில காலம் பிடிக்கலாம்.அது அடுத்த தலைமுறையோ அல்லது அதற்கு அடுத்த தலைமுறையோ..கண்டிப்பாக இது நடக்கும்.!
இதேபோல்தான்,சொந்த ரத்தபந்தங்களுக்குள் நடைபெறும் திருமணங்கள், ஊனமுற்ற குழந்தைகள் பிறக்க வழிவகுக்கும் என்பது நவீன விஞ்ஞானம்.
ஆனால் இன்னும் எத்தனையோ சாதிகளில் சொந்த மாமன்,மாமன் மகள்,மகன் அத்தை மகள்,மகன் என நெருங்கிய சொந்தங்களுக்குள் நடைபெறும் திருமணங்களை,சாதி வழக்கமாகவே வைத்திருப்பதன் காரணம் என்ன.?.கிராமப்பகுதிகளில் கொச்சையாக இன்றும் சொல்வார்கள். “ சொத்துப் பிரிஞ்சு போறதுக்கா,சொந்தத்தை விட்டு கல்யாணம் பண்றே..?.”ஆனால்,இன்று அந்தப் போக்கும் அழிந்துவருகிறது.
சொத்துக்களைப் பாதுகாப்பதற்காக என்று கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கருவியான மதத்தின் பயன்பாடுகள் வலுவிழக்கும்போது,புதிய கருவிகள் தேவைப்படுகிறது.
அது எவ்வாறு இருக்கவேண்டும்.?.அதன் மூலம் சொத்துக்கள் எப்படி பாதுகாக்கப்படும்.?
அதற்குத்தான் மனிதன் தோன்றிய காலத்திலிருந்து இருந்துவரும் இயல்பான உணர்ச்சியான காதல் என்பதை தூக்கிப்pடிக்க முனைகிறது,சொத்துக்களைப் பாதுகாக்கவும்,சொத்துக்களை சேர்க்கவும் முனையும் கூட்டம்.!

என்னடா இது. மொட்டைத்தலைக்கும்,முழங்காலுக்கும் முடிச்சுப்போடுவதாக இருக்கிறதே..? என்று குழம்பவேண்டாம்.

காதல் என்பது ஒருகாலத்தில் திரைப்படங்களிலும்,நாவல்களிலும்,கதை,கவிதை என்பவை உட்பட,படைப்புகளில் சித்தரிக்கப் பட்டவிதம் என்ன.?.


1950-ல்,நாதா என்று விளித்து,காலடியில் உட்காருவாள் காதலி.
60-ல்,நெஞ்சின் மீது,தனது கைகளை வைத்து சாய்வாள் காதலி.
70-ல்,காதலனுடன் ஓட்டல்களுக்கும்,ஊர்சுற்றவும் போவாள் காதலி.
80-ல்,கல்லூரியிலேயே,தீர்க்கமான காதலை வெளிப்படுத்துவாள் காதலி
90-ல்,சாதியும்,மதத்தையும் மறுத்து,காதலிப்பாள் காதலி.
2000-ல்,கட்டியவனை விட்டு,காதலால் இன்னொருவனை மணப்பாள் காதலி.
2010-ல்,டாடி மம்மி வீட்டில் இல்லே என்று அழைப்பாள் காதலி.
2020-ல் இனி என்ன செய்வாளோ..?

அதுபோகட்டும்,இதை பெண்கள் மீதான மதிப்புக் குறைவால் சொல்லவில்லை. சித்தரிக்கப்பட்ட விதத்தையே சொல்கிறேன்.ஏன் இந்தச் சித்தரிப்பு.?
சினிமா,நாவல்,சிறுகதை,கவிதை,விளம்பரம் என எதிலும் காதல் இருந்தால்தான் முன்னுரிமை.காதல் கதைகளுக்கு அதுவும் ஒரே கதாநாயகன் இருவரையல்ல, மூன்றுபேரைக் காதலித்தாலும் அதனை சத்தமின்றி நாம் ரசிப்பதும்,அவனாக நாம் இருந்தால் என்று ரகசியமாக ஆசைப்பட வைப்பதும்.அதற்கான வாய்ப்பு இருக்கிறதா..? என்று மெனக்கெடுவதும்… இந்தப்பட்டியல் வெகுநீளம்.!
போதிதர்மனைப்பற்றியே கதை எழுதினாலும்,அதை திரைப்படமாக எடுத்தாலும் அதிலும் காதலை விட்டுவிடாமல் இருக்கிறோமே..!

காதலைத் தவிர வேறு பெரிதான விஷயம் என்று எதுவுமே இல்லை என்று,இளைஞர்களுக்கு எதற்காக கற்பிக்கவேண்டும்.?.காதலுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து,படைப்புகளின் திசைவழியை ஏன் திருப்பவேண்டும்.?

அப்போதுதானே நண்பா,நீ அரசிடமோ,அவர்களின் பிரதிநிதிகளிடமோ உனக்கான வாழ்வியல் உரிமைகளைக் கேட்கமாட்டாய்.! மனிதனாகப் பிறந்துவிட்டோம்.எனக்கான வசதிகளைச் செய்துகொடு என்று கேட்கமாட்டாய்.!
கேட்காமலிருந்தால்தானே அவர்களது சொத்துக்கள் அப்படியே இருக்கும் அல்லது புதிதாய் சேர்க்கமுடியும்.

நீங்கள் காதலைப்பற்றி மட்டுமே,கவிதைகள் எழுதுவதும்,படைப்புகளை வெளியிடுவதும் உங்கள் விருப்பமாகத் தோன்றலாம்.ஆனால் அதுதான் உங்கள் விருப்பமாக அமைவதற்கு,உங்களை பழக்கப்படுத்திவிட்டோம்.அதைத் தவிர வேறு எதுவும் பெரிதில்லை என்று,ஒரு ஹிப்னாட்டிசம் போல அடிமையாக்கி விட்டோம் என்பதுதான் உண்மை.
ஆனால்,நீங்கள் அவ்வாறு படைக்கும்போது,உங்களுக்கே தெரியாமல்,யாருக்கோ துணைபோகிறீர்கள் என்பதே அர்த்தம்.!

காதல் கவிதைகளே எழுதக்கூடாது என்கிறீர்களா..? என்று நீங்கள் கேட்டால்,
அப்படியல்ல..
கம்பன்,இளங்கோ,பாரதி,காளிதாசன்,ஷெல்லி,கீட்ஸ்,பைரன்,உமர்கயாம்,கண்ணதாசன் ஆகியோர் சொல்லாத காதலா.? உவமைகளா.,? கருப்பொருளா..? எதை நீங்கள் புதிதாக சொல்லிவிடமுடியும்.
மலரிலிருந்த தேனைப் பருக வண்டு வந்தது.என்ற செயலை,நீங்கள் எத்தனை விதமான வார்த்தைகளில் சொன்னாலும்,அந்தக்கரு குறித்து முன்பே சொல்லப்பட்டிருக்கிறது.நிலா,தென்றல்,குழல்,உதடு,காதலியின் அங்கம் என எதை நீங்கள் வர்ணித்தாலும் அது முன்பே சொல்லப்பட்டிருக்கிறது.
பிறகு எதற்கு நீங்களும் அதையே சொல்லவேண்டும்.

காதலைக்குறித்துப் பாடும்போது,ஒரு ஆண்,ஒரு பெண் இருவரும் மனதால் இணைகின்ற,மனிதன் தோன்றிய காலம்தொட்டு நடைபெறுகிற ஒரு விஷயம்தானே.!

ஆனால் நீங்கள் சொல்வதற்கு புதிதான விஷயங்கள்,கருப்பொருள்கள் இங்கே இருக்கின்றன.கம்பனுக்கும்,பாரதிக்கும் தெரியாத விஷயங்கள் உங்களுக்கு தெரிந்திருக்கிறது.அவர்களுக்கு இல்லாத வசதிகள் உங்களுக்கு இருக்கிறது.
அதுதான் சமகாலத்துப் பிரச்சினைகளும்,எதிர்காலம் குறித்த கற்பனைகளும்..
பிறகென்ன.? காதலே என்றாலும்,சொல் புதிதாய்,பொருள் புதிதாய் படைப்போமே..!

காதலி சீதாவை
கடல்கடந்து
கடத்திச்சென்றால் என்ன.?.
தூது செல்ல சூடாமணி
தேவையில்லை..,
நவீன ராமனுக்கு
வெப் கேமிரா இருக்கிறது.!

பிரிவும்,பிரிவுமற்ற நிலையில்,காதல் கவிதையை இப்படியும் சொல்லலாமே..!

இது உங்களுக்கு இராமாயணத்தை நினைவூட்டினாலும்,அதை குறிப்பிடவில்லை.
சீதா என்ற பெயருள்ள காதலியை,தன்னிடமிருந்து பிரித்துச் சென்றதால்,ராமன் என்ற காதலன் வருத்தப்படவில்லை. என்பதே இங்கு சுட்டிக்காட்டப்படுகிறது.
ஆனால்,ஒரு கவிதையை அல்லது படைப்பை எழுதும்போது,நேரடியான ஒருவிஷயத்தைக் குறிப்பிடுவதோடு,மறைமுகமாகவும் மேலும் சிலவிஷயங்களைக் குறிப்பிடும்படியாக எழுதுவது,வாசகனை இன்னும் உற்சாகப்படுத்துமே.!அவனது சிந்தனையோட்டத்தை புதியவழியில் செலுத்துமே.! அதை ஏன் நாம் செய்யக்கூடாது.?.
இது சாதாரணமாக,காதலைப் பற்றி மட்டுமே சொல்லக்கூடிய படைப்பாக இருக்கிறது.

-உன் அழகு என்னைக்
கட்டிப்போடுகிறது..,
உன் நினைவுகளால் நான்
மூச்சுத் திணறுகிறேன்..,

விலைவாசிப் புயலுக்குள் சிக்கிய
குடும்பத் தலைவனைப்போல..!-

காதலிப்பவர்,தனது காதலை இப்படிச்சொன்னால் அதிலென்ன தவறு.?.முதல் இரண்டுவரிகளையும்,எல்லோரும் வேறு ஏதாவது வார்த்தைகளைப் போட்டுச் சொல்லித்தானிருப்பார்கள்.ஆனால்,கடைசி இரண்டுவரிகளாக,காதலின் வீரியத்தை,விலைவாசியுடன் ஒப்பிடும்போதும்,அதனை ஈடுகட்ட முடியாமல் விழிபிதுங்கும் குடும்பத்தலைவனின் நெருக்கடியான நிலையையும் சொல்லும்போது,கவிதை அழகு பெறாதா..?.புதிய அர்த்தம் தராதா.?.
இதேபோல்,

விண்ணில் ஏவும் ராக்கெட்டின்
வேகத்தை அதிகப்படுத்த
விஞ்ஞானிகள் ஆலோசனை..,
அதனால்
விலைவாசியின் வேகத்தைக்
குறித்து ஆராய்ச்சி..!

இப்படிச் சொல்லும்போது படிப்பவனின் ரசனைக்கு,நல்ல தீனியாக அது இருக்காதா.?.அவனையும் புதிதாக சிந்திக்கவைக்காதா.?.
மேலும் ஒரு படைப்பாளி என்பவன்,சமூகத்தோடு ஒன்றிணைந்து இருப்பதையும் இதுகாட்டவில்லையா..?.
இதனைத்தான் முன்பே குறிப்பிட்டேன்.கம்பனுக்கும்,பாரதிக்கும் தெரியாத,அவர்களது காலத்தில் இல்லாத, எத்தனையோ விஷயங்கள்
உங்களுக்கு தெரிந்திருக்கிறது.ஏன் அவற்றையெல்லாம் மையப்படுத்தி,உங்கள் படைப்புகள் வெளிப்படக்கூடாது.?

படைப்பு என்பதில் எத்தனைவிஷயங்கள் உள்ளது.கவிதை எனது கைவாள் என்று ஒரு கவிஞர் கம்பீரமாக பாடுகிறார் எனில்,மனதிகுலத்துக்கு எதிராக எவையெல்லாம் இருக்கிறதொ,அவற்றை வெட்டிச் சாய்க்கப் புறப்பட்டுவிட்டார் என்று அர்த்தம்.
எதற்காக வெட்டிச் சாய்க்க வேண்டும்.?.

இங்கே மீண்டும் மூன்றாவது அத்தியாயத்தை நினைவூட்ட விரும்புகிறேன்.

- சொத்துக்கள் இல்லாவிட்டாலும்,அடிப்படையான வசதிகளோடு யாரும் தங்கள் இயல்பான வாழ்க்கையை வாழமுடியும் என்ற உத்தரவாதம் கிடைத்துவிட்டால்…,
சற்றே யோசித்துப் பாருங்கள்..!.

நமது குழந்தைகளின் விருப்பத்திற்கேற்ற படிப்பு,படிப்புக்கேற்ற,அல்லது சக்திக்கேற்ற வேலை.., குடும்பத்தின் தேவைக்கேற்ற சம்பளம்.அடிப்படை வசதிகளுக்கு குறைவில்லாத வகையில் ஒருவீடு.அன்றாட தேவைகளாய் இருக்கின்ற போக்குவரத்து, மருத்துவம்,இன்னும் குடும்பத்தின் தேவைக்கேற்ற எல்லாமே நிறைவேற்றும் நமக்கான ஒரு அரசு...என்று இருந்தால்..! .. உங்களுக்கு எதற்கு சொத்து..?-

இந்த நாட்டின் சகலவிதமான சீர்கேடுகளுக்கும் காரணமாய் இருக்கும் தனிச்சொத்துரிமையைப் போக்கவும்,நமது எதிர்கால சந்ததிகள் எவ்வித அச்சமும் இல்லாமல் வாழவும்,காதலையும் எழுத்துக்கான,படைப்புக்கான ஒரு ஆயுதமாய் சிந்தியுங்கள்.
மேலும்,நமது கனவான எதிர்கால வாழ்க்கை நலமாக அமைய,இடையூறாக இருக்கும் அத்தனை விஷயங்களையும் உங்கள் பாடுபொருள்கள்,படைப்புகள் மூலம் அம்பலப்படுத்துங்கள்.எதுவெல்லாம் தனிமனிதனின்,சமூகத்தின் அமைதியைக் கெடுப்பதின் மூலம்,எதைப்பாதுகாத்துக் கொள்ள முயல்கின்றன என்று சிந்தியுங்கள்.காரணம் இல்லாமல் காரியம் இல்லை.எந்த விளைவுக்கும் எதிர்விளைவுண்டு என்று மெய்ப்பியுங்கள்.அளவு மாறுபாடே,குணமாறுபாட்டை தோற்றுவிக்கும்.இவையெல்லாம் விஞ்ஞானத்தின் மெய்ப்பிக்கப்பட்ட,மெய்யாகிவருகிற,மெய்யாகவே இருக்கப்போகிற உண்மைகள்.இது குறித்தும் ஆலோசனை செய்யுங்கள்.

ஏனெனில்,நாம் சந்தித்த சமீபத்திய உதாரணமாய் நமது நாட்டில்,நமக்கு பாரதியார்தான் இருக்கிறார்.அவனது பாடல்கள்,படைப்புகள் மூலம் ஆங்கில ஏகாதிபத்தியமே நடுங்கியது.
நடுங்கியது என்றால் பாரதியின் எழுத்துக்களை மட்டும் பார்த்து அல்ல.அந்த எழுத்துக்கள் ஏற்படுத்திய கிளர்ச்சிகள்.அதன் விளைவாய் விளைந்த சமூக ஒற்றுமை.அதன் தொடர்ச்சியாய் ஏற்பட்ட போராட்டங்கள்,அப்போராட்டங்களினால், ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு ஏற்பட்ட நட்டங்கள்.அச்சங்கள்.இதற்காகத்தான் நடுங்கியது.
இதேபோல்,காந்தி,பாலகங்காதர திலகர்,பகத்சிங்.சந்திரசேகர ஆசாத்,என எத்தனையோ பேரைக் குறிப்பிடலாம்.அவர்களின் எழுத்துக்கள் ஒரு சுதந்திரப்போரையே நிகழ்த்தியது.

நமது எழுத்துக்கள் என்ன செய்யப்போகிறது.!

-இதுவரை தொடர்ந்து பின்னூட்டங்கள் மூலம் என்னோடு இணைந்து,இதனை செம்மையாக்க உதவிய படைப்பாளிகளுக்கும்,தொடர்ந்து வாசித்த நண்பர்களுக்கும், நன்றி..!

இதனைப் பொறுத்தவைரை இத்துடன் முடிக்கிறேன்.!

இன்னொருமுறை மீண்டும் கைகோர்ப்போம்.!
-அன்புடன் பொள்ளாச்சி அபி.

எழுதியவர் : பொள்ளாச்சி அபி (10-Jan-12, 11:14 am)
சேர்த்தது : பொள்ளாச்சி அபி
பார்வை : 1338

சிறந்த கட்டுரைகள்

மேலே