போகும் போது அழகா? வரும் போது அழகா?.... சிறுகதை ...

ஒரு முறை ஒரு அறிவாளியின் வீட்டிற்கு இரு தேவதைகள் வந்தார்கள். அந்த அறிவாளி அவர்களைப் பார்த்துத் திகைத்த போது அவர்கள் தங்களை செல்வத்தின் அதிதேவதையாகவும் வறுமையின் அதிதேவதையாகவும் அறிமுகப்படுத்திக் கொண்டார்கள். அந்த அறிஞர் இருவரையும் வணங்கி அவர்கள் வந்த காரணத்தை வினவினார். அவர்களும் 'அறிஞரே. உங்கள் அறிவுத்திறனைப் பற்றி வெகுவாகக் கேள்விப்பட்டிருக்கிறோம். எங்களில் யார் அழகு என்று நீங்கள் சொல்லிக் கேட்க விரும்பி வந்திருக்கிறோம்' என்றார்கள். அறிஞரோ அடடா மாட்டிக் கொண்டோமே என்று திகைத்தார். வறுமைத்தேவதையை அழகில்லை என்றால் அவள் கோவித்துக் கொண்டுவிடுவாள். செல்வத்திருமகளை அழகில்லை என்றால் அவள் அவரை விட்டுச் சென்றுவிடுவாள். இரண்டுமே நடக்கக் கூடாது. என்ன செய்வது என்று சிந்தித்தார்.

சிந்தித்தவருக்கு ஒரு நல்ல யோசனை தோன்றியது. இருவரையும் நோக்கி வாசல் வரை நடந்து காண்பியுங்கள் என்றார். இருவரும் நடந்தார்கள்.

செல்வத்தின் அதிதேவதையிடம் 'அம்மா. நீங்கள் வரும் போது அழகாக இருக்கிறீர்கள்' என்று சொல்லிவிட்டு வறுமையின் அதிதேவதையிடம் 'அமாம். நீங்கள் போகும் போது அழகாக இருக்கிறீர்கள்' என்று சொன்னார். அவர்களும் அவர் பார்க்கும் போது அழகாக இருக்க செல்வத்தின் அதி தேவதை அவரை நோக்கி வந்து கொண்டும் வறுமையின் அதிதேவதை அவரிடம் இருந்து விலகிச் சென்று கொண்டும் இருந்தார்கள்.



செ.சத்யா செந்தில்,
தமிழ் முதலாம் ஆண்டு.
மைலம் தமிழ் கல்லூரி,
விழுப்புரம் மாவட்டம்,
தமிழ்நாடு - இந்தியா.

எழுதியவர் : செ.சத்யா செந்தில், (4-Mar-12, 4:18 pm)
பார்வை : 589

மேலே