நன்றே செய்மின் அதை இன்றே செய்மின்... சிறுகதை ...

அதிகாலை நேரம். நேற்று இரவு ஒரு நல்ல பாலகுமாரன் நாவல் படித்ததால் இரவு தூங்குவதற்கு வெகு நேரம் ஆகிவிட்டது. அதனால் என்ன? வழக்கம் போல் அதிகாலையில் எழுந்தால் தானே வீட்டில் செய்ய வேண்டிய வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு அலுவலகம் செல்ல முடிகிறது. இன்றும் காலை எழுந்ததில் இருந்து ஒரே வேலை. இன்று அவசியம் காய்கறி வாங்க சந்தைக்குப் போகவேண்டும். காலையில் போனால் தான் புத்தம் புதிதாய் வந்த காய்கனிகள் கிடைக்கும். அதனால் எத்தனை வேலை இருந்தாலும் மற்றவர் போல் மாலையில் சந்தைக்குப் போகாமல் முடிந்தவரை காலையிலேயே போவதை வழக்கமாய் வைத்துக்கொண்டிருக்கிறேன்.

இதோ சந்தைக்கு வந்தாயிற்று. நல்லவேளை. இன்றைக்குச் சந்தையில் அவ்வளவாய் கூட்டம் இல்லை. சனி ஞாயிறு என்றால் ஆற அமர காய்கனிகளைத் தேர்ந்தெடுத்து பேரம் பேசி வாங்கலாம். ஆனால் இன்றோ அலுவலகம் செல்லவேண்டும். அதனால் அவசர அவசரமாய் எங்கெங்கு நல்ல காய்கறி தென்படுகிறதோ அங்கெல்லாம் அவ்வளவாய் பேரம் பேசாமல் வாங்கிவிட்டு போகவேண்டியது தான்.

அது யார்? புதிதாய் ஒரு பாட்டி தெருவோரம் எதையோ விற்றுக்கொண்டிருக்கிறாளே? இதுவரை அவரை இங்கு பார்த்ததில்லை. முள்ளங்கி மட்டும் தான் வைத்துக்கொண்டிருக்கிறார். நன்றாய் வெள்ளையாய் நீளமாய் ஒல்லியாய் இளசாய் இருக்கிறது. சாம்பாரோ குழம்போ வைத்தால் நன்றாய் இருக்கும்.

என்னைப் பார்த்தவுடன் பாட்டி 'ஒன்னு ஒரு ரூபாதான். எடுத்துக்கோ சேட்டு' என்றாள். குரல் மிகவும் நடுங்கியது. ஒரு 80, 90 வயதாவது இருக்கும். நான் ஒன்றும் சொல்லவில்லை. இந்த தள்ளாத வயதில் காய்கறி விற்கும் படி என்ன கஷ்டமோ?

'சேட்டு. நீ தான் போணி பண்ணி வைக்கணும். மூனு ரெண்டு ரூபாக்கு குடுக்கறேன். வாங்கிக்கோ' . இன்னும் நான் முள்ளங்கிகளையும் அந்த பாட்டியையும் மாறி மாறி பார்த்துகொண்டிருந்தேன்.

ஒரு ஆறு முள்ளங்கிகளை எடுத்துக் கொண்டு 'இத எல்லாமே எடுத்துக்கோ சேட்டு. அஞ்சு ரூவா குடு போதும். எல்லாத்தையும் அப்படியே சாப்புடலாம். அவ்வளவு எளசு' என்றாள். இதற்கு மேல் பாவம் ஒன்றும் சொல்லாமல் இருக்கக்கூடாது. அவருக்கு ஏதோ அவசரம். சீக்கிரம் விற்றுவிட்டுப் போக விலையை குறைத்துக்கொண்டே போகிறார். என்னை சேட்டு என்று வேறே நினைத்துவிட்டார் போல. அது தான் முள்ளங்கியை அப்படியே தின்னலாம் என்கிறார்.

'பாட்டி. நான் சேட்டு இல்ல. தமிழ் தான். அந்த ஆறு முள்ளங்கிய குடுங்க' என்றேன்.

'அப்படியா தம்பி. செவப்பா குண்டா பாத்தவுடனே சேட்டுன்னு நெனச்சேன்' என்றார். நான் சிரித்து விட்டு 5 ரூபாய் கொடுத்துவிட்டு அந்த முள்ளங்கிகளை வாங்கிக்கொண்டேன்.

'உங்கள இதுவரைப் பார்த்ததே இல்லையே. புதுசா வந்திருக்கீங்களா?'

'இல்லியேப்பா. நான் எப்பவும் இங்கயே தான் உக்காந்திருப்பேன். நீதான் இந்தப் பக்கமே பாக்கறதில்ல.'

'அப்படியா பாட்டி' என்று சிறிது வழிந்துவிட்டு வந்துவிட்டேன். அவருக்கு என்ன கஷ்டம் என்று கேட்க நினைத்தும் ஏதோ ஒன்று கேட்கவிடாமல் தடுத்தது. நீதான் இதுவரை என்னை பார்க்கவில்லை என்று சொன்னாரே அதுவாய் இருக்குமோ? இருக்கலாம். எனக்கு கண் தெரியவில்லை என்றல்லவா சொல்லிவிட்டார். அவர் எக்கேடு கெட்டால் எனக்கென்ன? நமக்கு ஆயிரம் வேலை இருக்கிறது. நாமுண்டு நம் வேலை உண்டு என்று இருக்கவேண்டியது தான்.

கடந்த மூன்று வாரங்களாக சந்தை பக்கமே போகவில்லை. சரியான வேலை. இருக்கும் காய்கறிகளை வைத்து காலம் தள்ளியாச்சு. ஆனால் அந்த பாட்டியை பற்றிய கேள்வி மனதில் உறுத்திக்கொண்டே இருந்தது. நாம் அப்பொழுதே அந்த பாட்டிக்கு என்ன கஷ்டம் என்று கேட்டு ஏதாவது முடிந்த அளவு உதவி செய்திருக்க வேண்டும். ஏன் தான் இப்படி இருக்கிறோமோ? இந்த நான் என்ற எண்ணத்தை அந்த ஏழைக்கிழவியிடம் கூடக் காண்பிக்கவேண்டுமா? நாமெல்லாம் என்ன மனித ஜென்மமோ? சுற்றி எத்தனையோ பேர் கஷ்டப்படும்போது முடிந்த உதவி செய்யாமல் நமக்கென்ன என்று வந்துவிடுகிறோம்.
இன்றைக்கு அவசியம் சந்தைக்குப் போகவேண்டும். போகும்போது நிச்சயமாய் அந்தப் பாட்டியைப் பற்றி விசாரித்து ஏதாவது உதவி செய்யவேண்டும்.

எங்கே அந்தப் பாட்டியைக் காணோமே? தினமும் இங்கு தான் உட்கார்ந்திருக்கிறேன் என்று பொய் தான் சொன்னார் போல. வாரத்திற்கு ஏதோ ஒரு நாள் வருவார் என்று நினைக்கிறேன். இதற்கு முன் நான் வரும் போதெல்லாம் அவர் வந்ததில்லை போலும்; அதனால் தான் நான் பார்க்கவில்லை.

அந்தப் பாட்டி உட்கார்ந்திருந்த பாதை ஓரம் இருந்த கடைக்காரரிடம் அவரைப் பற்றி விசாரித்தேன்.

'இங்க ஒரு பாட்டி உக்காந்திருந்துச்சே. எங்க அந்தப் பாட்டி?'

'அந்தப் பாட்டிக்கு என்ன சார். சந்தோசமா போய் சேந்துருச்சு'.

ஓ....அந்தப் பாட்டிக்கு எந்த கஷ்டமும் இல்லையோ; நாம் தான் தேவையில்லாமல் கற்பனை செய்து கொண்டோமோ? யாரோ மகனோ மகளோ இல்லை வேறு உறவுக் காரர்களோ அவரை சந்தோசமா வைத்திருக்கிறார்கள் போல. அந்த கடைக்காரர் என் பதிலை எதிர்பார்க்காமல் மேலும் தொடர்ந்தார்.

'அந்த பாட்டி தினமும் இங்கன உக்காந்து தான் வித்துகிட்டு இருக்கும். அது போயி மூனு வாரம் போல ஆச்சே. என்னைக்கு சார் நீங்க பாத்தீங்க'

'நானும் ஒரு மூனு வாரத்துக்கு முன்னால பாத்தேன். அவங்க தினமும் வர்றவங்க தானா?'

'ஆமாம் சார். சின்ன வயசிலயே புருசங்காரன் செத்துபோயிட்டான். ரெண்டு பொண்ணுங்க. கஷ்டப்பட்டு அவங்களை வளத்து கல்யாணமும் பண்ணி குடுத்தாச்சு. அதுக்கப்பறமும் கஷ்டப்பட்டு இந்த காய்கறி வியாபாரம் செஞ்சுகிட்டு இருந்தாங்க. செத்து போற கடைசி நா வரைக்கும் கஷ்டப்பட்டு எப்படியோ இப்ப சந்தோசமா போய் சேந்துட்டாங்க'.

ஓ...அந்த சந்தோசமா போய்ச் சேர்வதைத் தான் அந்த கடைக்காரர் சொன்னாரா? மனம் பாரமாய் இருந்தது. வேறு ஒன்றும் சொல்லாமல் நடையைக் கட்டினேன்.



செ. சத்யாசெந்தில்,
முதுகலை தமிழ் முதலாம் ஆண்டு,
மைலம் தமிழ் கல்லூரி,
விழுப்புரம் மாவட்டம்,
தமிழ்நாடு - இந்தியா.

எழுதியவர் : செ.சத்யா செந்தில், (4-Mar-12, 5:01 pm)
பார்வை : 538

மேலே