மென்பொருள் துறையில் பணிசெய்யும் மாப்பிள்ளையைத் தேடும் பெண்களுக்கு…!நகைச்சுவை ...

மென்பொருள் துறையில் பணிசெய்யும் மாப்பிள்ளையைத் தேடும் பெண்களுக்கு…!


இராணி: என்னடி திடீர்னு ரொம்ப நாள்கழிச்சு பேசிருக்க என்ன விசயம்?


வாணி: வீட்ல மாப்பிள்ளை பார்க்கலாம்னு நிறைய இடத்துல பதிவு பண்ணாங்க இல்லை? நிறைய ஜாதகமா வந்திருக்கு. அதுல 4-5 ஒத்து வர மாதிரி இருக்கு. எதை தேர்வு பண்ணலாம்னு தெரியலை. அதான் குழம்பி போய் இருக்கேன்.


இராணி: இதில் என்ன குழப்பம்?


வாணி: நிறைய பொறியாளர்கள் சாதகம் வந்திருக்கு. இப்ப எல்லாம் மென்பொருள் துறையில இருப்பவங்க வேற துறைல இருக்கற பொண்ணுங்களை தான் கல்யாணம் பண்ணிக்கனும் யோசிக்கறாங்களாம். அதான் இதுல யாரை தேர்வு பண்றதுனு தெரியல. நீதான் அதே துறைல இருக்கியே . எனக்கு கொஞ்சம் யோசனை சொல்லு.


இராணி: சொல்லிட்டா போகுது. ஒவ்வொருத்தரும் என்ன வேலைனு சொல்லு.


வாணி: முதல் மாப்பிள்ளை திட்ட மேலாளர் (Project Manager) இருக்காரு.

இராணி: மேலாளரா? அப்படினா எப்பவுமே எதோ வேலையா இருக்கற மாதிரி ஒரு பில்ட் அப் கொடுப்பாரு. ஆனா உருப்படியா ஒண்ணும் செய்ய மாட்டாரு. ஒரு கிலோ அரிசில ஊருக்கே சாப்பாடு செய்ய சொல்லுவாரு. ஆட்டுக்கறி வாங்கிட்டு வந்து கொடுத்துட்டு சிக்கன் 65 செய்ய சொல்லுவாரு. அது முடியாதுனு சொன்னாலும், ஒத்துக்க மாட்டாரு. எப்படியாவது இராத்திரி பகலா உழைச்சாவது அதை செஞ்சி முடிக்கனும்னு சொல்லுவாரு. வேணும்னா இராத்திரி வண்டி (CAB) ஏற்பாடு பண்றேனு சொல்லுவாரு. டேய் இராத்திரி பகல் முழிச்சா மட்டும் எப்படிடா செய்ய முடியும் கேட்டாலும் ஒத்துக்க மாட்டாரு.

வாணி: ஆகா. அவ்வளவு ஆபாத்தானவரா? அப்ப வேண்டாம். அடுத்து இருக்கறவரு சோதனையாளர் (Test Engg).

இராணி: இவரு அவரை விட ஆபத்தானவரு. எது செஞ்சாலும் அதுல இருக்கற குறையை மட்டும் சரியா சொல்லுவாரு. நீ பத்து வகை சமைச்சு அவரை அசத்தனும்னு நினைச்சாலும் அதுல எதுல உப்பு கம்மியா இருக்குனு மட்டும் சொல்லுவாரு. நல்லா இருக்குனு எதுவுமே சொல்ல மாட்டீங்களானு கேட்டா, நல்லா செய்ய வேண்டியது தான் உன்
வேலை. அதனால அதை எதுக்கு சொல்லனும்னு கேட்பாரு. ரொம்ப நல்லவரு.

வாணி: அப்ப இவருக்கும் “போ போ” சொல்லிடலாம். அடுத்து இருக்கறவரு செயல்திறன் சோதனையாளர் (Performance Test Engg).

இராணி: இது அதுக்கும் மேல. எல்லாமே நல்லா இருந்தாலும், இதை செய்ய இவ்வளவு நேரமானு கேட்பாரு. காபி போட்டா, காபி நல்லா இருக்கானு பார்க்கமாட்டாரு. 5 நிமிசத்துல போட வேண்டிய காப்பியை 10 நிமிச மா போட்டிருக்கனு சத்தம் போடுவாரு. நீங்க சொல்றது வேற, நான் செஞ்சது பில்டர் காபினு சொன்னாலும் கேட்க மாட்டாரு. அதே மாதிரி தான் எல்லா வேலைக்கும். அப்ப நீ மேக் அப் பண்ற நேரத்துக்கு நீ எல்லாம் இவரை யோசிக்கவே கூடாது.

வாணி:அப்ப பொறியாளர் வேண்டாம்னு சொல்றியா?

இராணி: யார் அப்படி சொன்னா? அதுல இளிச்ச வாய் கூட்டம் ஒண்ணு இருக்கு. அது தான் உருவாக்குபவர்(Developer) கூட்டம். எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்கும்.

வாணி: அவுங்களை பத்தி சொல்லேன்.

இராணி: நீ எதுவுமே செய்ய வேண்டாம். எல்லாமே இவுங்களே செஞ்சிடுவாங்க. நாம பின்னாடி இருந்து உற்சாகப்படுத்தினா போதும். ஆனா இவுங்க கிட்ட இருக்கற பிரச்சனை என்னனா எது கேட்டாலும் தெரியும்னு சொல்லிடுவாங்க. நம்ம “அறிவாளி” படம் தங்கவேல் பூரி சுட்ட கதை மாதிரி. அப்படினாலும் ஓ.கே தான். எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்குவாங்க. ஆனா அடிச்சிட்டு அடிச்சிட்டு “நீ ரொம்ப நல்லவனு” சொல்லனும். அவ்வளவு தான்.

வாணி:இது அருமையா இருக்கே. அப்ப அந்த மாதிரி மாப்பிளையை தேடிடுவோம்.


செ. சத்யாசெந்தில்,
முதுகலை தமிழ் முதலாம் ஆண்டு,
மைலம் தமிழ் கல்லூரி,
விழுப்புரம் மாவட்டம்,
தமிழ்நாடு - இந்தியா.

எழுதியவர் : செ.சத்யா செந்தில், (9-Mar-12, 6:23 pm)
பார்வை : 1268

மேலே