இது நம்ம வேலையில்ல

'அந்த கார் வந்த போக்கே சரியில்ல.'

"என்ன இருந்தாலும் வண்டில வந்தவரு கொஞ்சம் கவனிச்சு இருக்கலாம்.கார் காரணுங்க இப்படித்தான் கண்ணு மண்ணு தெரியாம ஓட்டுவாங்க."

"1995க்கு அப்புறம் இப்பத்தான் இப்படி ஒரு விபத்த நேர்ல பாக்குறன்.நாளுக்கு நாள் நாடு மோசமாயிட்டே போகுது."
ஆளுக்கு ஒரு வசனம் சொல்லிக் கொண்டிருந்தார்கள் அடிபட்டவனைச் சுற்றி நின்று கொண்டு.

"ஒரு 30-35 வயசு இருக்கும்.தலையில நல்ல காயம்.சீக்கிரம் வாங்க."
ஒரு பெரியவர் தன் செல்பேசியில்,108 தொடர்பாளரின் உறக்கம் கலைத்து,உரக்க பேசிக்கொண்டிருந்தார்.

ஒரு பழைய மாருதி கார்,அடிபட்டுக் கிடந்தவரை விட அதிகம் சத்தம் போட்டுக்கொண்டு வந்தது.அதிலிருந்து இருவர் இறங்கினர்.

"நான் பக்கத்து ஊர் போலீஸ் இன்ஸ்பெக்டர்.என்ன ஆச்சு" அட்டையை நீட்டியபடி வினவினார்.

உடனே அனைவரும் சற்று பின்வாங்க,அனைவரின் முகத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டிக்கொண்டிருந்த டீக்கடை உரிமையாளர்,நடந்ததைச் சொன்னார்.
"ஒரு கார் காரன் காட்டான் மாதிரி வந்தான் சார்.இவரு ஒழுங்காதான் வந்தாரு.இடிச்சிட்டு நிக்காம போயிட்டான் பாவி.பத்து நிமிஷம் இருக்கும் நடந்து"

"அந்த கார் நம்பர் குறிச்சீங்களா?"

"அது வந்த வேகத்துல எங்க சார் நம்பர் எல்லாம் பாக்க."

"சரி.கார் எப்படி இருந்துது பாக்கறதுக்கு?"

"கறுப்பு வண்டி சார்.நல்ல மலமாடு மாரி பெருசா இருந்துச்சு." கடைக்காரர் முடிக்க,

"தண்ணி போட்டுட்டு ஓட்டிட்டு வந்தான்னு நெனைக்குறன்.தாருமாரா வந்தான்"
தன் விசாரணை அறிக்கை அளித்தான் ஒரு மேதாவி.

"ஹைவேயில வண்டி ஓட்டும்போது இவரு தான் சார் பத்திரமா வரணும்"
போன் பெரியவர் சொன்னார்.

"கொஞ்ச நேரம் சும்மா இருங்கய்யா".இது கான்ஸ்டபிள்.
108 தன் ஒலியை எழுப்பியவாறே அதிகாலை வேளையில் உறங்கிக் கொண்டிருந்த நாய்களையும் பறவைகளையும் எழுப்பிவிட்டு வந்தது.

காயமடைந்தவர் அவசரமாய் அவசர ஊர்தியில் ஏற்றப்பட,சைரன் ஒலி மீண்டும் எழும்பியது.

அனைவரும் அவரவர் வேலையைப் பார்க்க கிளம்பினர்.
...................................
"யோவ் உனக்கு என்ன சர்க்கரை வியாதியா?பத்து நிமிஷத்துக்கு ஒருதடவ வண்டிய ஓரங்கட்ட சொல்ற".கான்ஸ்டபிளைக் கடிந்த அதிகாரியிடம்,

"ரொம்ப தண்ணி குடிச்சிட்டன் சார்.அதான்."

"வாய்யா சீக்கிரம்"அவர் கத்த,

"சார் அந்த கறுப்பு ஹம்மர் கார்ல ஹைவேஸ் ஓரத்துல நிறுத்தி தண்ணி அடிக்குறாங்க சார்."
பதிலுடன் சேர்த்து பத்தடி தூரத்தில் நடக்கும் கேடையும் சொன்னார் கான்ஸ்.

"விடுய்யா.நாம இப்போ டூடில இல்ல.அப்படியே போய் கேட்டாலும் அமைச்சர்,அது,இதுனு பேசுவாங்க.சீக்கிரம் ஊர் போய் சேரணும்.கண்டுகாம வா போவோம்.இது நம்ம வேலையில்ல."

20 நிமிடங்களுக்கு முன் நடந்தது அதிகாரி அவர்களுக்கு நினைவுக்கு வந்தது......

எழுதியவர் : ....................கந்தசுவாமி............. ...... (17-Mar-12, 4:32 pm)
பார்வை : 718

மேலே