திருப்பூவணம் பதிகம் 10

பதிகம் 10 சந்தத்துடன் வழங்கப்பட்டுள்ளது.

"மண்டைகொண் டுழிதரு மதியில் தேரரும்
குண்டருங் குணம்அல பேசுங் கோலத்தர்
வண்டமர் வளர்பொழின் மல்கு பூவணம்
கண்டவ ரடிதொழு தேத்தல் கன்மமே" 10

சொற்களைப் பிரித்து வாசிப்பதற்கு எளிமையாகத் தரப்பட்டுள்ளது.

"மண்டை கொண்டு உழிதரு மதி இல் தேரரும்,
குண்டரும், குணம் அல பேசும் கோலத்தர்;
வண்டு அமர் வளர் பொழில் மல்கு பூவணம்
கண்டவர் அடி தொழுது ஏத்தல் கன்மமே" 10

பதவுரை:

மண்டை - ஒருவகைப் பாத்திரம்,
உழிதரு தேரர் - அலைந்து திரிகின்ற தேரர், புத்தர்.
குண்டர் - போக்கிரிகள்.
குணம் அல பேசுங்கோலத்தர் - பயனில்லாத பேசும் குணமுடையவர்கள். கன்மம் – காரியம், கடமை.

பொருளுரை:

மண்டை என்னும் ஒருவகைப் பிட்சைப் பாத்திரத்தை ஏந்திப் பிச்சையெடுத்து அலைந்து திரிகின்ற, மதியற்ற புத்த சமயத்தினர்களே, போக்கிரிகளே, இறையுண்மையை உணராது பயனற்றவைகளைப் பேசும் குணமுடையவர்களே, வண்டுகள் மொய்க்கின்ற வளமுடைய சோலைகள் நிறைந்த திருப்பூவணம் என்னும் திருத்தலத்தை அடைந்து, அங்கு வீற்றிருந்தருளும் சிவபெருமானின் திருவடிகளைத் தொழுது போற்றி வணங்குவது உங்கள் கடமையாகும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-Aug-12, 11:48 am)
பார்வை : 482

சிறந்த கட்டுரைகள்

மேலே