சித்தம் எப்படியோ ஐயா நின் சித்தம் எப்படியோ
என் கல்லூரி நண்பர் திருப்பூரைச் சேர்ந்த மருத்துவர். தி.சுப்பிரமணியன் என்னைப் பார்க்க வந்திருந்தார். வேதநாயகம் பிள்ளையின் கீர்த்தனைப் புத்தகம் பற்றி நான் சொன்னதும், அவரும், பிள்ளையின் ’நாதநாமக்ரியை’ ராகத்தில் அமைந்த ’சித்தம் எப்படியோ ஐயா நின் சித்தம் எப்படியோ’ என்ற ஒரு பிரபலமான கர்த்தரைப் பற்றிய பாடலை மனமுருகப் பாடிக் காட்டினார்.
இப்பாடலை வேதநாயகம் பிள்ளையவர்கள் ’பரசு’ ராகத்தில் இயற்றியிருக்கிறார்.
பல்லவி:
சித்தம் எப்படியோ ஐயா நின் சித்தம் எப்படியோ
அநுபல்லவி:
உத்தமனாக என்னை உயர்த்திடுவாயோ
கர்த்தனே நீயென்னைக் கைவிடுவாயோ (சித்தம்)
சரணங்கள்:
அருள்புரிவாயே
அருந்தனப் பொருள்சொரிவாயே
தருமவானாம்படிதான் தெரிவாயோ
இருள்மூடும் பாவியென்றெனைப் பிரிவாயோ (சித்தம்)
பாதஞ்சேர்ப்பாயோ
எந்தன் மனக்கேதந்தீர்ப்பாயோ
ஆதன்செய்வினை அடியோடே பேர்ப்பாயோ
ஏதுங்கதியில்லானென்றிரங்கிப் பார்ப்பாயோ (சித்தம்)
வாடிநொந்தேனே
மெய்ஞானக்கண் மூடிநைந்தேனே
நாடியாள்வாயென்று நம்பிவந்தேனே
பாடும் வேதநாயகன் பருகுஞ்செந்தேனே (சித்தம்)
இப்பாடலை சிந்துபைரவி, பிலஹரி, முகாரி, நாதநாமக்ரியை போன்ற ராகங்களிலும் பாடலாம் என்று தெரிகிறது.