ஆங்கில வழிக் கல்வி
இனி ...
சில தமிழொலிகளும்
பல ஆங்கிலயொலிகளுமாய்
பிறிதொரு மொழி தோன்றலாம்
இனி ..
பார்வைக்கு எங்கும்
ஆங்கிலம் ஒளிரலாம்
செய்திகள் முதல் சினிமா வரை
மொழி மாறலாம்
இனி ...
தமிழினத் தலைவிப் பெயரைக் கூட
தமிழன் மாற்றிடுவான்
மதர் என்று
இனி ...
பெயர்மாறலாம்
தமிழ்நாடு கூட
டுமில்கண்ட்ரி என்று
இனி...தமிழனைக்
குண்டூசிகள்
குத்திக் கொள்ளும் போதுதான்
அவன் வாய்கள்
தமிழ் பேசும்
அதுவும் தமிழென
அவனுக்குத் தெரியாமல்
இனி...
உயிரும் மெய்யும்
ஒற்றும் ஒட்டும் இருக்காது
இனப்பற்றும் சற்றும் இருக்காது
இனி...
எல்லாம் வளரும்
தமிழன்..
ஆங்கிலவழி பயில்வதால்
அறிவும் பண்பாடும் தவிர
அதுதான் வளர்ச்சியோ..!
ஓ..மனிதர்களே..
80 நாளில் வசமாகும்
பிற மொழியினை
வசமாக்கிக் கொள்ளப் போகிறோம்..
வாழ் நாளெலாம் வழிகல்வியாக
தாய்மொழி இழந்து...
ஓ..தமிழ்நாடே.. நீ..
தாயைப் பறி கொடுத்து விட்டு
தாயில்லாத நாடாகிறாய்...
நீ மட்டுமல்ல
உனக்குச் சொந்தமான
நாங்களும்தான்..!