கார்த்திகை தீபத் திருநாள்...!! பிரம்மா விஷ்ணு கடவுளரிடையே பெரிதெனப்படுபவர்...
கார்த்திகை தீபத் திருநாள்...!!
பிரம்மா விஷ்ணு கடவுளரிடையே
பெரிதெனப்படுபவர் யாரென கேள்வி
தாமே பெரிதென இருவரின் வாதம்
தீர்வினையளித்த ஈசனே போற்றி..!!
எந்தன் அடிமுடி எதுவென காண்பவர்
அவரே பெரிதென முடிவதுவாகும்
அசரீரியெனவே ஈசன் இயம்பிட
கடவுளரிருவரும் காண விரைந்தனர்..!!
அன்னப்பறவை யெனஉருகொண்டு
பிரம்மனும் பறந்தான் விண்ணதுவரையில்
கண்டிடவில்லையே ஈசனின் முடியதை
தோல்வியே கண்டான் படைக்கும் கடவுள் ..!!
வராகமெனவே உருவினில் விஷ்ணு
அதலபாதாள பூமியை குடைந்தும்
கண்டிடவில்லையே ஈசனின் அடியதை
தோல்வியே கண்டான் காக்கும் கடவுள்..!!
அகிலமுமவனின் ஆட்சியில் கொண்ட
பரம்பொருள் ஈசன் ஒளியாய் தோன்றிட
முழுமுதற் கடவுள் ஈசன் பெரிதாய்
பிரம்மா விஷ்ணு ஆணவம் அழிந்தது..!!
தேவரும் முனிவரும் அனைவரும் காண
பிரம்மா விஷ்ணு வரமாய் வேண்ட - ஈசன்
பேரொளியெனவே காட்சியருளிய
நன்னாளே திருநாள் கார்த்திகை தீபம்...!!