கணையாழி ஜனவரி 2016 இதழில் வெளிவந்தஎனது “கறுப்பு வெள்ளி”...
கணையாழி ஜனவரி 2016 இதழில் வெளிவந்தஎனது “கறுப்பு வெள்ளி” என்ற கவிதையை, எழுத்துத் தள தோழர்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.கணையாழி ஆசிரியர் குழுவுக்கும்,எழுத்துத் தோழர்களுக்கும் நன்றி!
கறுப்பு வெள்ளி
அந்தப் புதன்கிழமை என் நண்பனின்
யாதுமாகிய காதலிக்குத் திருமணம்.
முகூர்த்த நேரத்தில் மலைக்கோட்டை மீதேறி
அந்தத் திருமண மண்டபத்தை
வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்தான்.
அவளுடன் பேசிய அலைபேசியை
ஒரு பாறையில் மோதிச் சிதறிடச் செய்தான்.
இறங்கி வருகையில் ஒவ்வொரு படியிலும் நின்று
சங்கல்பம் எடுப்பதுபோல் எதையோ முணுமுணுத்தான்.
திரும்பி வருகையில் திருச்சி சாரதாஸில்
அம்மாவுக்கு நூல்புடவை வாங்கினான்.
என்னிடம் பைக்கைப் பிடுங்கி
ஜோடியாக நடப்பவர்கள் மீது
மோதுவதுபோல் நெருங்கி கிறீச்சிட்டு நிறுத்தினான்.
‘பிளஃபி’ என்று அவள் பெயர்வைத்த
அவனுடைய செல்ல நாய்க்குட்டியை
அது திரும்பி வரக்கூடாதென்று
நாற்பது மைல் தள்ளி, விட்டு வந்தான்.
என்னதான் காதலிக்குத் திருமணம் என்றாலும்
இப்படியெல்லாமா செய்வார்கள்?
அந்தக் கறுப்பு வெள்ளிக்கிழமையில்
எதுவும் செய்யாமல் நான் என்னவோ
அமைதியாகத்தான் இருந்தேன்.
(நன்றி: கணையாழி)