எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஆன்லைன் ரம்மி… இளைஞர்களை குறிவைக்கும் ஹைடெக் ஆபத்து! இன்றைக்கு...

ஆன்லைன் ரம்மி… இளைஞர்களை குறிவைக்கும் ஹைடெக் ஆபத்து!

இன்றைக்கு பல்வேறு இணையதளங்களில் ஒரு விளம்பரம் நம்மை சுண்டி இழுக்கிறது. “நான் 10,000 ரூபாய் வென்றேன்” என்று  பல வகையான ஆட்கள் அந்த விளம்பரத்தில் தோன்றி நமக்கு நம்பிக்கை ஊட்டுகிறார்கள். இணையதளங்களில் மட்டுமல்ல, தொலைக்காட்சியிலும் அந்த விளம்பரம் இப்போது அடிக்கடி தென்பட ஆரம்பித்துவிட்டன. அந்த விளம்பரம், ஆன்லைன் ரம்மி.

நம்மூரை பொறுத்தவரை, சீட்டு விளையாட்டு என்பது சமூகத்தினால் புறக்கணிக்கப் பட்டது.  இன்று நாடு முழுவதும் உள்ள ரம்மி விளையாடப்படும் கிளப்புகளில் கூட, வயது வந்தவர்கள் பொழுதுபோக்கத்தான் அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால், இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டை யார் வேண்டுமானாலும் வயது வித்தியாசமின்றி  விளையாட முடியும் என்பதில் இருந்தே, இதனால் ஏற்படப்போகும் ஆபத்து பெரிய அளவில் இருக்கும் என்பது தெரிகிறது.  ஆன்லைனில் நீங்கள் கேண்டி க்ரஷ் விளையாடுகிற மாதிரியோ, ஆங்கிரிபேர்ட்ஸ் விளையாடுகிற மாதிரியோ அல்ல  ஆன்லைன் ரம்மி   விளையாட்டு. 

என்னதான் ஒரு இணையதளம் ‘https’ என அங்கீகாரம் பெற்ற பாதுகாப்பான இணையதளம் என்று சொல்லக்கூடியதாக இருந்தாலும், ஆன்லைனில் நீங்கள் யாருடன் விளையாடு கிறீர்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.  மேற்கு நாடுகளில் இருப்பதுபோல, இந்தியாவில் வலுவான டிஜிட்டல் கண்காணிப்போ அல்லது தவறு ஏற்பட்டால் பணம் திரும்பக் கிடைக்கும் என்றோ உறுதியாகச் சொல்ல முடியாது.  நிஜமான ரம்மி விளையாடு கிறோம் எனில், நம் எதிரில் இருக்கும் நபர் சீட்டுகளை கலைத்துப் போடுவார். இருவரோ, மூவரோ ஆடுவோம். ஒருவேளை பணம் வைத்து ஆடினால்கூட அதை கையாள்வது நாமாகத்தான் இருப்போம். ஆனால், ஆன்லைன் ரம்மியில் நாம் முதலில் குறிப்பிட்ட தொகையை நம் வங்கிக் கணக்கில் இருந்து ஏற்றவேண்டும். அதன் பின்னர் 5 ரூபாய் வைத்து (ஆம், குறைந்த ஆட்டம் ஐந்து ரூபாயிலிருந்து துவங்குகிறது) ஆடும் ஆட்டத்தில் பங்கெடுத்தால், குறிப்பிட்ட தொகையை சேவைக் கட்டணமாக எடுத்துக்கொள்கிறது ஆன்லைன் ரம்மி நடத்தும் நிறுவனம்.

ஆன்லைன் ரம்மியில் எதிரில் இருப்பவர் வென்றதாக அறிவிக்கும்போது உண்மையாகவே அது மனிதன்தானா அல்லது ரோபாட்டா என்கிற சந்தேகம் வந்துவிடுகிறது.இந்த விளையாட்டை தொடர்ந்து விளையாடினால், பிற்பாடு இதிலிருந்து வெளியேறுவது கடினம். ஒருமுறை விளையாடி விட்டு இணையத்தில் நீங்கள் எங்கு சென்றாலும், அந்த தளத்தின் பேனர் விளம்பரங்கள் உங்களைத் தொடர்ந்து வந்து சீட்டு விளையாடும் ஆசையைத் தூண்டும். நிச்சயமற்ற ஆட்டம், எதிராளி யார், அவர் திறமை இதில் என்ன என்பதே தெரியாத நிலையில், பணம் மட்டுமல்ல, நேரமும் பெரிய அளவில் வீணாகும். 


இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் லாட்டரி தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த ஆன்லைன் ரம்மிக்கு எப்படி அனுமதி கிடைத்தது? கடந்த ஆண்டில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மதன் லோகர் மற்றும் எஸ்.ஏ.போபர் இருவரும் கொடுத்த தீர்ப்பு இதற்கு காரணம். “ரம்மி விளையாட்டு என்பது திறன் சார்ந்த விளையாட்டுதான் என்பதில் மாற்றமில்லை. 

திறன் சார்ந்த விளையாட்டுக்கும் அதிர்ஷ்ட வாய்ப்பினை எதிர்பார்க்கும் சூதாட்டத்துக்கும் சம்பந்தமில்லை. அதே நேரம், இதை நடத்தும் நிறுவனங்கள் புதிய நிறுவனங்களாக இருக்கின்றன என்கிற கேள்விக்கு இந்த மனுவில் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை” என கடந்த ஆண்டு 2015 ஆகஸ்ட் 13 தேதியில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.இதனை அடுத்துதான் ஆன்லைன் ரம்மி விளையாட்டுத் தளங்கள் விஸ்வரூபம் தொடங்கின.

“முதல்ல நான் பணம் கட்டாமதான் ஆடத் துவங்கினேன். நிறைய ஜெயிச்சேன். என் கணக்குல டம்மி பணமா லட்சக் கணக்குல சேர்ந்துச்சு. அப்பதான் 100 ரூபாய் கட்டி நிஜமா ஆடலாம்னு தோணுச்சு. ஆடினேன், ஜெயிச்சேன். ஒரு மாசம் வெறித்தனமா ஆடினேன். மாசக் கடைசில பார்த்தா, 2,000 ரூபாய் தோத்திருந்தேன். அதைவிட முக்கியம், ஒரு மாசத்துல 12 நாள் லீவ் போட்டி இருந்தேன்” என்கிறார் சென்னையை சேர்ந்த ரவி.

இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டு சட்டப்படி அங்கீகரிக்கப்பட்டதா என வழக்கறிஞர் என்.ரமேஷிடம் கேட்டோம்.‘‘2015-ல் ஒரு வழக்கில் உச்சநீதிமன்றம், திறன் விளையாட்டுகள் விளையாடுவது சூதாட்டம் ஆகாது என்றும்,  ரம்மி ஆட்டம் திறன் விளையாட்டு என்றும் சொன்னது. ஆனால், மற்ற சீட்டு விளையாட்டுகளைத் திறன் விளையாட்டு என்று சொல்லவில்லை.  

ஆன்லைன் ரம்மி விளை யாட்டுக்கு இந்தத் தீர்ப்புப் பொருந்தாது.ஆனால், ஆன்லைன் ரம்மி விளையாட்டை உச்சநீதிமன்றம் அனுமதித்துவிட்டது போல, ஒரு மாயதோற்றம் உருவாக்கப்பட்டு, அதன் அடிப்படையில் புற்றீசல் போல, பல ஆன்லைன் ரம்மி தளங்கள் இன்று கொள்ளையடிக்கின்றன.  ஆன்லைன் ரம்மி விளையாட்டை திறன் விளையாட்டு எனச் சொல்ல முடியாது.

விளையாட்டு (Gaming) என்பது மாநிலஅரசின் அதிகார வரம்புக்கு உட்பட்ட பொருளாகும். அதனால்தான் ஒவ்வொரு மாநிலமும் தனித்தனியே இதற்கென சட்டம் இயற்றி வைத்துள் ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை, தமிழ்நாடு விளையாட்டுச் சட்டம் (Tamil Nadu Gaming Act)மற்றும் சென்னை நகர காவல்துறை சட்டம் (Chennai City police Act) என்ற சட்டங்களின் கீழ் சீட்டு விளையாட்டுக்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப சட்டத்தை உருவாக்க வேண்டியது அரசின் கடமையாகும். 

உரிய சட்டமும் முறைப்படுத்தலும் இல்லாத காரணத்தால், ஆன்லைன் ரம்மி விளையாட்டை சிறுவர்கள் விளையாடுவதை எப்படித் தடுப்பது, ஏமாற்றப்படாமல் எப்படிக் கண்காணிப்பது, எங்கே முறையிடுவது என்பதில் தெளிவு இல்லை.சில மாநிலங்களில் ஆன்லைனில் பணம் வைத்து விளையாடுவது முறைப்படுத்தப்பட்டுள்ளது.

உதாரணமாக கோவா, சிக்கிம் மாநிலங்களில் இந்த வகை சூதாட்டத்தை முறைப்படுத்தி சட்டம் இயற்றப்பட்டுள்ளது. சட்டம் இயற்றி, அரசின் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படும்போது, ஏமாற்றப்படுவதும், சட்ட மீறல்களும் தடுக்கப்படலாம்’’ என்றார்.அரசு அனுமதியுடன் இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டு நடைபெற்றாலும், பணம் வைத்து விளையாடும் விளையாட்டை இது ஊக்கப்படுத்து கிறது. ஒருவர் ரூ.10,000 வென்றதாகச் சொன்னால்,  யாரோ ஒருவர் ரூ.10,000 தோற்று இருப்பார். 

ஜெயித்தவர் எதன் அடிப்படையில் ஜெயித்தவர், தோற்றவர் எதைக் கவனிக்கத் தவறியதால் தோற்றார் என்பதையெல்லாம் புரிந்துகொள்ள முடியவில்லை எனில், இதைத் திறன் சார்ந்த  விளையாட்டு என்று எப்படிச் சொல்ல முடியும்..?   இது திறன் சார்ந்த ஆட்டம் என்றால் கிரிக்கெட்டும் இரண்டு அணிகளின் திறன் சார்ந்த ஆட்டம்தானே! அதை அடிப்படையாக வைத்து செய்யப்படும் பெட்டிங்கையும் விளையாட அனுமதிக்கலாமே என்பது போன்ற கேள்விகள் எழத்தான் செய்கிறது!ஆன்லைன் ரம்மி என்ற ஆபத்து எல்லை மீறுவதற்குள் தடுக்க வேண்டியது தமிழக அரசின் கடமை!

பதிவு : vaishu
நாள் : 20-Sep-16, 4:48 pm

மேலே