கோவைக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியை கவர்னர் வித்யாசாகர்ராவ்,...
கோவைக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியை கவர்னர் வித்யாசாகர்ராவ், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் வரவேற்கிறார்கள்.
கோவை:
கோவை வெள்ளிங்கிரி மலையடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் 112 அடி உயர ஆதியோகி சிவனின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சிலை மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு இன்று மாலை பிரதிஷ்டை நடைபெறுகிறது. சிலையை பிரதமர் மோடி இன்று மாலை திறந்து வைக்கிறார்.
இதற்காக லக்னோவில் இருந்து தனி விமானம் மூலம் மதியம் 2.30 மணிக்கு பிரதமர் மோடி புறப்படுகிறார். மாலை 5.15 மணிக்கு கோவை பீளமேடு விமான நிலையம் வருகிறார்.
அங்கு அவரை கவர்னர் வித்யாசாகர்ராவ், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் வரவேற்கிறார்கள். இதற்காக எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் இருந்து பகல் 12.35 மணிக்கு விமானம் மூலம் கோவை சென்றார்.
வரவேற்பு முடிந்ததும் பிரதமர் மோடி, கவர்னர் வித்யாசாகர்ராவ், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் ஒரே ஹெலிகாப்டரில் ஈஷா யோகா மையம் செல்கிறார்கள். அங்கு நடைபெறும் விழாவில் ஆதியோகி சிவன் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்து பேசுகிறார்.
விழாவில் தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ், புதுச்சேரி மாநில கவர்னர் கிரண்பேடி, தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான், மத்திய மந்திரிகள் கலந்து கொள்கிறார்கள்.கோவை வரும் பிரதமர் மோடிக்கு 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படை ஐ.ஜி. பியூஸ் பாண்டே தலைமையில் அதிகாரிகள் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்து வருகின்றனர்.தமிழக சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் கோவையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். மேலும், கூடுதல் டி.ஜி.பி. திரிபாதி மேற்பார்வையில் 4 ஐ.ஜி.க்கள், 4 டி.ஐ.ஜி.க்கள் தலைமையில் 15 போலீஸ் சூப்பிரண்டுகள் உள்பட 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பிரதமர் வருகையின் போது மோசமான வானிலை காரணமாக சாலையில் பயணிக்க நேர்ந்தால் அதற்கான ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. இதற்காக குண்டு துளைக்காத இரண்டு கார்கள் மற்றும் ஜாமர் கருவி பொருத்தப்பட்ட 2 வாகனங்கள் தயாராக உள்ளன.
இந்த கார்கள் நேற்று மாலை அவினாசி ரோட்டில் இருந்து செல்வபுரம், பேரூர் வழியாக சென்று ஒத்திகை பார்க்கப்பட்டது.
ஈஷா யோகா மையத்தை சுற்றி உள்ள வனப்பகுதிகளில் சிறப்பு அதிரடிப்படை, கியூ பிரிவு போலீசார், மத்திய பாதுகாப்பு படை போலீசார், நக்சல் தடுப்பு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
பேரூர் சாலை, ஈஷா மையம் செல்லும் சாலைகளில் 30 இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.