சிந்தனை செய்மனமே-15 ஐந்தறிவும் ஆறறிவும் பூவுலகில் மனிதர்கள் வாழுகின்ற...
சிந்தனை செய்மனமே-15
ஐந்தறிவும் ஆறறிவும்
பூவுலகில் மனிதர்கள் வாழுகின்ற வழி பலவிதம்.
உடலில் வலுவிறுந்தும் பலரால் ஓட முடியவில்லை, மனதால் எழமுடியவில்லை, மரம்போன்ற அவர்களது வாழ்க்கையில் "உணர்வு" மட்டும்தான் மிஞ்சுகிறது.
இன்னும் பலர் நத்தைபோல, விலங்குபோல, வாழ்க்கையில் ஏதோ ஒன்றுக்காக வாழ்நாள் முழுதும் அலைந்து திரிந்து கொண்டிருக்கிறார்கள். இதிலும் பலர்ப "சுவையுணர்வு" ஒன்று மட்டுமே தேடியலைவதைக் காண்கிறோம்
மேலும் பலர், ஈசல் எறும்பு போல எதற்க்காகப் பிறந்தோம் என அறியாது, வாழ்நாளைக் குறுக்கி, யாருக்கும் பயனில்லாமல், வாழ்க்கை ரசனையை "நுகராமல்" குறுகிய காலத்தில் மடிவதையும் நாம் பார்க்கிறோம்
பலர், விட்டில்பூச்சி, வண்டு, தும்பி, ஈ போல ஒளியிருக்கும் இடத்திலே வாசம் செய்யும், அதுபோல பகட்டான வாழ்க்கையை விரும்பி, "கண்ணால் காண்பனவற்றை" எல்லாம் கைவசப்படுத்தும் முயற்ச்சியில் ஈடுபட்டு, முடிவில இருப்பதை இழந்து இருக்கும் வாழ்க்கையைத் தொலைத்து விடுவதுமுண்டு.
அனைத்து விலங்கினங்களும் "ஒலிகளைக்" கேட்கின்ற திறமையுடன், பகைவராது, தன்னை பிறரிடமிருந்து பகைநீங்கி நெடுங்காலம் வாழ தற்காத்துக் கொள்வதுபோல், மனிதனும் கேளிக்கை எனும் செயலில் ஈடுபட்டு, நல்வாழ்க்கையில் ஐம்புலன்களையும் அடக்கி வாழ முயற்ச்சித்தான், ஆனாலும் சிலரே அதில் வெற்றி காண்கின்றனர் எனலாம்.
இவ்வாறு ஐந்தறிவுக்கு மேம்பட்டு, மனம் சிந்தனை எனும் ஆறாவதறிவை மனிதனுக்குக் கொடுத்தான் இறைவன். ஆனால், ஆறறிவைப் பெற்றும் உலகில் இன்னும் பலர் ஐந்தறிவு வாழ்க்கையே வாழ்வதைப் பார்க்கிறோம்.
நாம் சரியாகத்தான் வாழுகிறோமா என்பதை ஊர்ஜிதம் செய்துகொண்டு, அன்றாட வாழ்வில் பலரைச் சந்திக்கும்போது, இந்தப் பண்புகளை அவர்களோடு ஓப்பீடு செய்து பார்த்தால் விந்தையாக இருக்கும்.
ஒரு சில நேரங்களில் நாம் சரியாகத்தான் இருக்கிறோம் என எண்ணும்போது இது போன்ற எண்ணங்களும், ஒப்பீடுகளும் நமக்குள் பல கேள்விகளை எழுப்பும். அந்நேரத்தில் நம்மை நாமே கேள்விக் கேட்டுக் கொள்கிறோம் இல்லையென்றால் இதை மற்றவரிடம் சொல்லி "இவன் ஏன் இப்படி இருக்கிறான்" என்று சொல்லி ஆதங்கப் படுகிறோம் அதுதான் உண்மை.
உலகில் சிலரே, ஐந்தறிவுக்கு மேம்பட்டு ஆறாவது அறிவான மனதையும் சிந்தனையையும் பயன்படுத்தி நன்மக்களாய் வாழ்வதில் வெற்றி காண்கின்றனர் என்பதை பல மஹான்களும், சிந்தனையாளர்களும், எழுத்தாளர்களும் தத்தமது கருத்தை வெளியிட்டிருக்கிறார்கள்.
இதுபற்றிய முடிவான ஒரு வார்த்தையைக் கூறவேண்டுமென்றால், ஒருசிலரை “நல்ல மனிதர்” என்று சமூகம் அடையாளம் காட்டுவதை உதாரணமாகக் கூறலாம்.
இப்படி சமூகத்தில் நல்ல மனிதர் என்று பெயரெடுக்காமல் வாழ்பவரை, ஐயன் வள்ளுவன் ஒரு படி மேலே சென்று அவர்களை "கயவர்" என்றுரைக்கிறார். விலங்கு பறவை போன்ற இனங்களில் இவர்களுக்கு ஒப்பானவர்களை நான் கண்டதில்லை என்கிறார் வள்ளுவர்.
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்ட தில்.