மாயத்தோற்றம் தாள்களுக்கிடையே வைத்து மூடிய மைதோய்ந்த நூல் விதம்விதமாக...
மாயத்தோற்றம்
தாள்களுக்கிடையே வைத்து மூடிய
மைதோய்ந்த நூல்
விதம்விதமாக இழுபடும்போது
உருவாகின்றன எண்ணற்ற சித்திரங்கள்
ஒரு தாளில் தென்படுகிறது
ஊமத்தம்பூ
இன்னொன்றில் சுடர்விடுகிறது
குத்துவிளக்கு
அடுத்த பக்கத்தில் ஆர்ப்பரிக்கிறது
அலை உயர்த்திய கடல்
அதற்கடுத்து படபடக்கிறது
முகமற்ற பெண்ணின் விரிகுழல்
பிறிதொரு பக்கத்தில்
உடலைத் தளர்த்தி
தலையை உயர்த்தி
செங்குத்தாய் விரிந்த
பாம்பின் படம்
- பாவண்ணன்