எண்ணம்
(Eluthu Ennam)
பறவைகளின் பிரார்த்தனை..!
சுதந்திரமென்ப தனைவருக்கும் பொதுவானால்
—சுதந்திரமாய்த் திரியும் பறவையின மதில்சேராதோ.?
அகத்தில் மனிதனை அடைத்தாலது பாவமெனில்
—ஜகத்தில் பறவைக்கது பரவலாய்ப் பொருந்தாதோ.?
பகையின்றி வாழ்ந்தோம் பகட்டாகப் பறந்தோம்.!
—பூவெழில் வனப்புடன் வட்டமாய்த் திரிந்தோம்.!
வகையாயெமைக் கூண்டிற்குள் அடைத்து விட்டான்.!
—பகையானான் பரந்த மனம்கொண்ட பறவைக்கே.!
அனைத் துயிருக்குமொரே நீதியெனில் பறவையை
—அடைத்து வைக்கும் செயலுக்கெனத் தனிநீதியா.!
அநியாயமாய்க் கூண்டுளடைத்தது? ஏனெனக் கேட்டால்
—அன்பு பாசமென்பார் அனைத்துமே பொய்யாகும்.!
கனியைப்பறித்தீர் காடுகளைக் கருணையின்றி அழித்தீர்.!
—கட்டுக்கடங்கா யெம்சுதந்திர மதைநீர் தட்டிப்பறித்தீர்.!
குற்றம்கண்டா? கூண்டிலே அடைத்தீர்? எனக்கேட்டால்
—பற்றுக்கொண்டே அடைத்து வளர்க்கிறே னென்பார்..!
பறவைகள் பூமிக்குக் கிடைத்ததோர் புண்ணியஜீவன்.!
—இயற்கையைக் காக்குமுயருளம் கொண்ட உயிரினம்.!
எம்மைச் சொந்தமாக்கக் கூண்டுக்குள் அடைத்தசெயலை..
—எந்தமன்றத்தில் வழக்காடியாம் விடுதலை பெறுவோம்.!?
யாரிடம் கேட்பது பாவத்துக்கு மோட்சமுண்டாவென
—ஆரூடம் சொல்லென கூண்டுக்கிளியிடம் கேட்டேன்?
பந்தயம் வைத்து ஆரூடம் சொல்லி நம்மால் பிழைக்கும்
—பாவமனிதரும் பிழைக்கட்டுமெ யென்றான் சகோதரன்.!
வளமுடன் வாழ்கவென்பான் ஆரைப் பார்த்தாலும்.!
—வானிலே பறந்த எங்களை வலைவைத்துப் பிடிக்க..
அனுதினமும் வருவான் அருமையாய்ப் பேசுவானவன்.!
—அடிமை வாழ்வு கொடிதெனச் சற்றும் உணராதவன்.!
சிறுஅறையைச் சுத்தம்செய்ய நித்தமவன் வருவான்.!
—கறுப்புள்ளக் கயவனைக் கண்டுகொள்ள மாட்டோம்!
மிரண்டகண்ணுடன் மீளாத்துயரோடு வானை நோக்கிய
—இருண்ட வாழ்வெனும் பறக்கமுடியா பரிதாபநிலையுடன்.!
இறகோடுபிறந்து இரும்புச் சிறையில் வாழுமெமக்கு..
—சிறகையேன் படைத்தாய்?சிந்திக்கிறோம் பலநாளும்!
கூண்டுக்குள் குடும்பம்செய்தே குறையிலா வாழ்வுபெற..
—குஞ்சொன்று வேண்டும் சிறகில்லாமல் அருள்வாயா.!இறைவா…
===============================================
வல்லமை மின் இதழ் நடத்திய படக்கவிதை போட்டியில், இன்றுமுதல் சனிக்கிழமை வரை சிறந்த கவிஞரென பாராட்டுபெற்ற கவிதை..
நன்றி பட உதவி:: கூகிள் இமேஜ்