எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.


அவனா? அவளா?


ஆணுக்கும் பெண்ணுக்கும்தானே

நான் வந்து பிறந்தேன்.

ஆக்கங்கெட்ட பிறப்பா ஏன் இங்கே

அலைந்தேன்?



கதிரு நிற்கும் கழனியில

களையா நான் முளைச்சுக்

கதியிழந்து நிற்கிறனே.

அரும்பு மல்லித் தோட்டத்தில்

அரளியாய் நான் முளைச்சு

அருமை கெட்டு நிற்கிறனே.



முகஞ் சுழிச்சு பார்க்கையிலே,

அகம் கிழிஞ்சு போகுதய்யா

என்னை

அருவருத்து ஒதுக்கையிலே,

அங்கமெல்லாம் கூசுதய்யா



தப்பாகப் பிறந்தது நான் செஞ்ச

தப்பா? எனக்கு விளங்கலையே.

அப்பா அம்மா செஞ்ச தப்பா?

அதுவும் எனக்குப் புரியலையே.

விதி செஞ்ச தப்பால நான்

வீதியிலே நிற்கிறனே.

தப்பான தலையெழுத்தால்

தடுமாறித் தவிக்கிறனே.



ஆண் என்றாலும்

பெண் என்றாலும்

இரண்டும் இல்லா

இழிவானதொரு

உயிரென்றாலும்

உயிரும் பசியும்

ஒண்ணுதானே.



அர்த்தநாரீஸ்வரர் சாமியாம்.

ஆண்டவனாய்க் கும்பிடணுமாம்.

அர்த்தமில்லாத வாழ்க்கையிலே

அழுந்தி உழலும் அலியெனக்கு,

ஆதரவாய்க் காட்டு வழியெனக்கு.



ச.தீபன்

9443551706





மேலும்


மேலே