ஒரு கை ஓசைகள்.......

நீ எறிந்த பார்வையில்
நான் என்னும் குளம்
சலனமா?...சடலமா?...

விழி மீன்
விறைத்த மீனாய்
உன் பார்வைத் தூண்டிலில்.

ஒற்றையடிப் பாதையில் நான்...
நீ என்னும் இலக்கு நோக்கி.
வழி தராத முட்களோடு.

என் பயணம் நகர்த்தும் நீ
வினைச் சொல்லா?...பெயர்ச் சொல்லா?
இலக்கணப் பிழையா?.... காதல்.

உன்னை எழுதி....காகிதத்தில் விழுந்த
என் எழுத்துப் பூச்சிகள்...
என் மனமா?...அதன் மரணமா?...

வனம் புகுந்த விலங்கெனத்
திமிறும் என்னில்...வழி செலுத்துவது...
காதலா?...காமமா?...

மலை உடையும் ஓசைகள்
உனக்குக் கேட்காமல் போய்விட....
வலிக்கிறது ...என் நெஞ்சின் ஒரு கை ஓசை.

எழுதியவர் : rameshalam (23-Jan-13, 4:34 am)
பார்வை : 149

மேலே